– கொலையை தான் செய்யவில்லையென இறுதி வரை மறுத்த சந்தேகநபர்
2015 ஆம் ஆண்டு பெண்ணை கொடூரமாக கொலை செய்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் பயணப் பொதியில் வைத்துச் சென்ற வழக்கில் குற்றவாளியாக நிரூபணமானவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2015 ஜூலை 29ஆம் திகதி கொழும்பு 11, செட்டியார் தெருவிலுள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற குறித்த கொலைச் சம்பவத்தில் யாழப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜா கார்த்திகா என்பவரின் உடல் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த கொலை வழக்கில் சந்தேகநபரான பெட்ரிக் கிருஷ்ணராஜாவை குற்றவாளி என அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இன்று (24) தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த சந்தேகநபர் கடந்த 2015 ஓகஸ்ட் 05ஆம் திகதி கோவில்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொலை, சடலத்தை மறைத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கிருஷ்ணராஜா மீது சட்ட மாஅதிபரால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரச தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் முடிவு செய்தது.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர், பிரதிவாதி தான் இக்கொலையைச் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் கூறிய போதிலும், விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் குற்றவாளிக்கு எதிரான உறுதியாக உள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றத்தின் தன்மை மற்றும் அது தொடர்பான விடயங்கள் ஆகியன மரண தண்டனையை விதிப்பதை உத்தரவாதம் செய்வதாக, இறுதித் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே சுட்டிக்காட்டினார்.