2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த விசாரணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை.

இதன் பின்னணியில் பல சூழ்ச்சிகளும், அரசியல்வாதிகளின் தலையீடு மாத்திரமின்றி காவல் துறையை சேர்ந்த பல உயர் அதிகாரிகளும் இத்தாக்குதல் சம்பவத்தோடு தொடர்பு பட்டுள்ளமை தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

நல்லாட்சி காலத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தோடு பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்ரி ஆகியோரின் செல்வாக்கு சரிந்தது. ராஜபக்ச சகோதரர்கள் மீள் எழுச்சி பெற்று கோட்டாபய ஜனாதிபதியானார்.

மகிந்த பிரதமரானார். ஆனால் கோட்டாபயவின் காலத்தில் இந்த சம்பவம் குறித்த எந்த காத்திரமான விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நாட்டில் வாழ்ந்து வரக் கூடிய கத்தோலிக்க மக்களுக்கும் பல வாக்குறுதிகளும் ஆறுதல்களும் வழங்கப்பட்டனவே ஒழிய சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் குறித்து ஆழமான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக இச்சம்பவம் குறித்து சிறந்த முறையில் புலனாய்வு செய்த பொலிஸ் அதிகாரிகள் அதிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் அவ்வாண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த எப்.ஐ.பி முகவர்கள் இது குறித்து புலனாய்வு செய்ததாகவும் தனது கோரிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் வந்ததாக இப்போது தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்தாக்குதலின் சூத்தரதாரி சஹ்ரான் ஹாசிம் என்ற அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கையை அநுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது ரணில் விக்ரமசிங்கவின் மீது இன்னும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவத்துக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்திருந்தமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர் சட்டத்தரணி என்ற வகையில் அவரை சந்தித்தார் ராஜபக்சவின் ஆதரவாளரான உதய கம்மன்பில.

ரணிலும், உதய கம்மன்பிலவும் எதற்காக பிள்ளையானை சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பது நாட்டு மக்களிடையேயும் சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றது.

பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் கூறியதையடுத்தே அவரை சந்திக்க ரணில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆகையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட ஒரு அரசியல் மறை கரம் ஒன்று பதற்றத்துக்குள்ளாகி பிள்ளையானை சந்திப்பதற்கு ரணிலை அணுகியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

டொன் பிரியசாத்

அதே வேளை அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளரும் இனவாத கருத்துக்களை பரப்பி வந்தவருமான டொன் பிரியசாத் கொல்லப்பட்டார்.

இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி திகன கலவர சம்பவம் ஆகியவற்றுக்கு பின்னணியில் செயற்பட்ட இவரை கொன்றவர்கள் அவரை தமக்காக பயன்படுத்திக்கொண்டவர்களாகவே இருப்பர் என்பது பலரினதும் கருத்தாக உள்ளது.

இவரது மறைவு குறித்து ராஜபக்சவோ அல்லது அவருடன் நெருக்கமாக இருந்த நாமல் ராஜபக்சவோ எந்த பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்தவில்லை.

எனினும் உயிர்த்த ஞாயிறு சம்பவம் குறித்த அமெரிக்காவின் அறிக்கையை இலங்கை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் இன்னும் இலங்கை மீதான வரிகளை உயர்த்தக் கூடும் என்றும் ரணில் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளமை பலரை எரிச்சலடையச்செய்துள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கும் டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு வரிகளை அதிகரிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்பதை ரணில் பகிரங்கப்படுத்த வேண்டுமென குரல்கள் அதிகரித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரிகளை நன்கு தெரியும். அவர் ஜனாதிபதியாவதற்கு உதவிய அந்த தரப்பினரை இப்போது காப்பாற்ற அவர் முயற்சிக்கின்றார் என்பதே உண்மையாகும்.

அமெரிக்காவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டால் அதற்கப்பால் உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லாது போய்விடும்.

ஏனென்றால் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானும் குறித்த குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்.

ஆகவே சாட்சியங்களும் எவருமில்லை. இது சஹ்ரானின் தீவிரவாத கும்பல் திட்டமிட்டு செய்த ஒரு தாக்குதல் என்றே விசாரணைகளை முடிக்க வேண்டியேற்படும். அதையே ரணில் விக்ரமசிங்கவும் வலியறுத்துவது போன்று தெரிகின்றது. ஆனால் அமெரிக்காவின் விசாரணை அறிக்கையை இலங்கை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னான்டோ, இலங்கை அதிகாரிகளோ அல்லது எங்கள் திருச்சபையோ எப்போதும் சுதந்திரமான, விரிவான விசாரணையை கோரிக்கொண்டிருக்கின்றோம். எப்.பி.ஐ எப்போதும் தங்களை தொடர்புகொண்டு ஆலோசிக்காமல் இந்த முடிவை எப்படி எடுத்தது?”

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சட்ட மா அதிபர் டப்புல டி லிவெராவும் கூறியுள்ள கருத்துகள், சேனல் 4 உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் சஹ்ரான் தனியாக செயற்படவில்லை என்பதையும், இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கின்றது என்பதை தெள்ளத்தெளிவாகக் கூறுகின்றது.

எனவே, சஹ்ரானின் பின்னணியில் வேறு ஒருவரும் இருக்க முடியும் என்பதில் நாங்கள் சந்தேகமில்லாமல் நம்புகிறோம்.

FBI தனது விசாரணையை எவ்வாறு நடத்தியது, யாரை சந்தித்தது, என்ன ஆதாரங்கள் கொண்டது என்பன தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளன. எப்.பி.ஐ அதிகாரிகள் எங்களை ஒருமுறையாவது சந்தித்ததில்லை. அப்படி இருக்க, அவர்கள் கூறும் முடிவை எவ்வாறு ஏற்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் நியாயங்கள் இருப்பதாகவே தெரிகின்றன. தற்போதைய அநுர அரசு அமெரிக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறும் ரணில் விக்ரமசிங்க தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டாதாக எங்கும் கூறவில்லை.

சில நேரங்களில் ஏற்றுக்கொண்டதாக கையெழுத்திட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடம் அதை வழங்கியிருக்கலாம்.

இவை ஊடகங்களுக்கு வெளிவராமலிருந்திருக்கலாம். ஆகவே ரணில் ஏற்றுக்கொண்ட ஒரு அறிக்கையை வேறு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதானது ரணிலுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டியுள்ளது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ரணிலும் தனது காலத்தில் ஆர்வம் கொள்ளவில்லையென்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

எது எப்படியானாலும் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக யாரோ ஒரு குழுவினர் இயக்கி வருவதாகவே தெரிகின்றது. தன்னை ஜனாதிபதியாக்குவதற்கு உதவிய தரப்பினருக்கு அவர் செய்யும் நன்றி கடனாக இதை எடுத்துக்கொள்ளலாமா தெரியவில்லை.

சி.சி.என்

 

Share.
Leave A Reply