பலுசிஸ்தானில் தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் சென்றுக்கொண்டிருப்பதாகவும், உடனடியாக இதை அந்நாட்டு அரசு சரி செய்ய வேண்டும் எனவும் ஐநா எச்சரித்துள்ளது.
பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் மிக்பெரிய மாநிலங்களில் ஒன்றாகும். இது புவியில் ரீதியாக ஈரானுடனும், ஆப்கானிஸ்தானுடனும் எல்லையை பகிர்ந்துக் கொண்டுள்ளது. இந்த மாநிலத்தின் வளர்ச்சி பெரியளவில் இல்லை. இதனல், உள்ளூர் மக்கள் பாகிஸ்தான் அரசு மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டு தீவிரவாத குழுக்கள் இங்கு பரவலாக இருந்து வருகின்றனர்.
ஆனால், காவல்துறையும், அம்மாநிலத்தில் உள்ள சட்டங்களும் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியாக இல்லை. எனவே, இந்த பகுதியில் மனித உரிமை மீறல்கள் அதிகளவு நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2023-2024ஆம் ஆண்டு நடந்த பிரச்சனைகளை பட்டியலிட்டால், விஷயத்தின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். இந்த ஓராண்டில் மட்டும் இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், பொது போக்குவரத்து மற்றும் சீனாவின் ‘சிபிசிஇ’ திட்ட பணிகள் நடைபெறும் இடங்கள் மீதும் 60-க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. பழங்குடியினர் மோதல், கடத்தல் சம்பவம், கௌரவ கொலைகள் என 300-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளன. பெண்கள், குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றன. பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கட்டாய திருமணங்கள், போதைப்பொருட்கள் பற்றியும் ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன.
இவ்வளவு பிரச்சனைகளை சுட்டிக்காட்டிதான் ஐநா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த ஒரு நாடும் தீவிரவாதத்துடன் போராடுவதற்கு முன், பிரச்சனையின் மூல காரணத்தை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க விசாரணை மற்றும் தேடல் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல், முன்கூட்டியே கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வன்முறை வதை முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையை கைவிட வேண்டுமென்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.