இலங்கை அரசின் கழுத்தில் தற்போது இரண்டு கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இக்கத்திகள் எப்போதும் கழுத்தில் பாயலாம். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை தான் அரசுக்கு.
அமெரிக்க வரிவிதிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பான நிபந்தனைகளுமே அந்தக் கத்திகள். இரண்டு கத்திகளையும் சமாளிப்பது இலகுவான ஒன்றல்ல. தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அதற்கு இடம் கொடுக்காது. முறைமை மாற்றம் பல்வேறு தளங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் போதே இது சாத்தியமாகும்.
அமெரிக்காவின் வரிவிதிப்பை அமெரிக்கா உலகின் மீது தொடுத்த ஒரு வர்த்தகப் போர் என கூறலாம். இது நடைமுறை உலக ஒழுங்கைக் குழப்புகின்ற ஒன்றாக இருப்பதனால் அனைத்து நாடுகளுமே பாதிப்பை எதிர்நோக்குகின்றன.
பொருளாதார பலமுள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளே வரிவிதிப்பினால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றன. பொருளாதார ரீதியாக பலவீனமுற்றிருக்கின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு தடுமாற்றத்திற்கே இடமில்லை. முழுமையாக விழுந்து விடுவதற்கே வாய்ப்புகள் உண்டு.
அமெரிக்க வரி விதிப்புடன் உலக பங்குச்சந்தைகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டன. உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைகள் பாதிப்படைந்தது.
செயலிழந்த வர்த்தக சூழல் உருவாகியது. சீனா, மெக்ஸிக்கோ, இந்தியா போன்ற நாடுகள் சுங்கத் தாக்கத்திற்கு உள்ளாகின. நாடுகளின் நாணயங்கள் டொலருடன் ஒப்பிடுகையில் தமது மதிப்பை இழந்தன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி விதிப்புப் போரும் இடம்பெற்றது.
இலங்கை மீது அமெரிக்கா 44 வீத வரியை விதித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதிகளில் முதல் நிலையில் உள்ள நாடு அமெரிக்கா தான். ஏறத்தாழ 25 வீத ஏற்றுமதி அமெரிக்காவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றது. தைத்த ஆடைகள் ஏற்றுமதியே முக்கிய இடத்தை பெறுகின்றது.
இந்த வரி விதிப்பினால் அமெரிக்க நிறுவனங்கள் இலங்கை உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு தயக்கத்தையே காட்டும். அவர்கள் தயக்கத்தைக் காட்டினால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும்.
இது உள்நாட்டில் ஊழியர் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நெருக்கடிகளை உருவாக்கும். தற்போது 90 நாட்களுக்கு வரிவிதிப்பை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தக் கால அவகாசம் கழிந்த பின்னர் மீண்டும் அது வரி விதிப்பை மேற்கொள்ளலாம்.
இலங்கை இது விடயத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ஒரு தூதுக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பிருந்தது.
அங்கு அவர்கள் அதிகாரிகளுடன் பேசியபோதும் நம்பிக்கைக்குரிய உறுதிமொழிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிலவேளை அமெரிக்கா வரி விதிப்பின் அளவை சற்றுக் குறைக்கலாம்.
அவ்வாறு குறைத்தாலும் இலங்கை பாதிப்பையே எதிர்நோக்கும். வரிவிதிப்பை முழுமையாக அமெரிக்கா நிறுத்திவிடும் என சொல்வதற்கில்லை. மாற்றுத் தெரிவுகளும் இலங்கையிடம் தற்போது இல்லை. ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டி ஒருங்கிணைந்த குரலை இதற்கு எதிராக கொண்டு செல்ல முயற்சித்தாலும் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது.
பொருளாதார ரீதியாக அமெரிக்கா இறங்கி வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால், பூகோள அரசியல் நலன்களைப் பெறுவதற்காக சிலவேளை இறங்கி வரலாம். இலங்கைத் தீவு பூகோள ரீதியாக கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த தீவாக இருப்பதனால் சீனாவைப் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்கா சற்று கீழிறங்கி வரலாம்.
அமெரிக்கா தனது உலக ரீதியான எதிரியாக இன்று சீனாவையே பிரதானமாக பார்க்கின்றது. பூகோள அரசியல் என வருகின்ற போது தமிழ்த் தரப்பிற்கும் அங்கு கௌரவமான இடமுண்டு.
தமிழ் அரசியல்; கட்சிகள் அதனைப் பயன்படுத்தவில்லை என்பது வேறு கதை. தமிழ்த்தேசிய சக்திகள் தமிழ் மக்களின் நலன்களுக்காக இதனைப் பயன்படுத்துவது பற்றி முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
அடுத்தது ஜி.எஸ்.பி வரிச்சலுகை. இது பின்தங்கிய நாடுகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்காகவும், தாராண்மை ஜனநாயக விழுமியங்களை பின்தங்கிய நாடுகள் பின்பற்றுவதற்காகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் வழங்கப்படும் ஒரு பொருளாதார சலுகையாகும்.
இது இலங்கைக்கு வழங்கப்பட்ட போதும் 2010 ஆம் ஆண்டு மனித உரிமைகளின் நியமனங்களை இலங்கை பின்பற்றத் தவறியமைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் நல்லாட்சிக் காலத்தில் சர்வதேச நியமங்களை இலங்கை பின்பற்றுவதாக வாக்குறுதி அளித்ததனால் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டது.
எனினும், சர்வதேச நியமங்களை இலங்கை ஒழுங்காக பின்பற்றத் தவறியதால் சலுகை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களுக்கேற்ப புதிய சட்டம் கொண்டுவரப்படல் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக இலங்கை வந்துள்ளது. அது மே 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து மதிப்பீடு செய்து அறிக்கையாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும்.
அதன் பின்னர் சலுகையைத் தொடர்ந்தும் வழங்குவதா, இல்லையா என்பதை ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்யும். தூதுக்குழு இதுவரை ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் இலங்கை சிவில் சமூகத்தையும் சந்தித்து உரையாடியுள்ளது.
சர்வதேச நியமங்களுடன் கூடிய 27 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது. இதில் நல்லிணக்கம் உட்பட மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சிவில் சமூக உரிமைகள், என 27 விடயங்கள் அடங்கியுள்ளன.
‘நிபந்தனைகளை இலங்கை பின்பற்றாவிடின் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது’ என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரினோ கூறியுள்ளார். ‘நிபந்தனைக் குறைப்புக்கு இடமில்லை’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரை அதன் இரண்டாவது பெரிய ஏற்றுமதி வருமானத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே தருகின்றன. இதன் மூலம் ஐரோப்பிய யூனியனிலுள்ள 27 நாடுகளுக்கும் இலங்கை ஏற்றுமதி செய்ய முடியும்.
ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கின்ற வரிகளில் 66 சதவீத வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் 85 சதவீதமான பொருட்களுக்கு இந்த வரிசலுகை வழங்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கை வருடத்திற்கு 2.5 பில்லியன் வருமானத்தைப் பெறுகின்றது.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ‘கடும் நிபந்தனைகளை விதியுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.
கடந்த கால மீறல்கள் தொடர்பில் பொது பொறுப்புக் கூறல் உறுதிப்படுத்தப்படாமை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மை கண்டறியப்படாமை, வடக்கு – கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமமை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை, புதிய அரசியல் யாப்பு உருவாக்க செயல்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை உட்பட பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
அதேவேளை தூதுக்குழுவினரும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டிற்கான அலுவலகம், என்பவற்றின் செயற்பாடு தொடர்பில் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
உண்மையில் நடந்த இன அழிப்பிற்கு தமிழ் மக்கள் பரிகார நீதியினையே கோரியிருந்தனர். ஆனால், சர்வதேச சமூகம் நிலைமாறு கால நீதியை சிபார்சு செய்திருந்தது.
இந்நிலைமாறுகால நீதி உண்மையை அறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையே உறுதிப்படுத்துதல் என்பவற்றை உள்ளடக்கியது. இவற்றையும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே யதார்த்த நிலையாகும்.
நிலைமாறு நீதி சரிவராத போது பரிகார நீதியை நோக்கியே சர்வதேச சமூகம் செல்ல வேண்டும். பரிகார நீதி சர்வதேசத் தலையீட்டுடன் கூட தீர்வை நோக்கி நிலைமையை தள்ளிக் கொண்டு போகும்.
போர்க்குற்றம், மனித உரிமை மீறலுக்கான குற்றம்; என்பவை இலங்கை அரசின் தீர்மானத்தின் படியே மேற்கொள்ளப்பட்டன. எனவே, பதவிக்கு வருகின்ற எந்த அரசாங்கங்களும் இது தொடர்பான செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கப் போவதில்லை.
குற்றமிழைத்தவன் ஒருபோதும் நீதிபதியாகிவிட முடியாது என்றே இயற்கை நீதி கூறுகின்றது. இலங்கை அரசு இது விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கவே எப்போதும் முயற்சிக்கும். அரசின் இந்த நிலை தமிழ் மக்களுக்கு சாதகமானது. தமிழ்த்தரப்பு இந்த சாதக நிலையினை வினைத்திறனுடன் பயன்படுத்த ஒருபோதும் தயங்கக்கூடாது.
தமிழ் மக்கள் தொடர்பான பொறுப்பு தமிழ்த்; தேசிய கட்சிகளுக்கே அதிகம் உண்டு. அவை இன்னமும் இது விடயத்தில் வினைத்திறனுடன் செயலாற்ற முன்வரவில்லை.
தமிழ்த்; தலைவர்கள் மேலோட்டமான கருத்துகளை மட்டும் கூறியுள்ளனர். எவை, எவை மேற்கொள்ளப்படல் வேண்டும் என உறுதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவில்லை. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமந்திரன் மட்டுமோ, அல்லது தமிழரசுக் கட்சி மட்டும் செல்வதால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.
சர்வதேச விவகாரங்களில் சுமந்திரனின் கடந்த காலம் அனைவரும்; அறிந்ததே. தமிழ் மக்கள் தொடர்பான சர்வதேச அபிப்பிராயத்தை நீர்த்துப் போகச் செய்ததில் சுமந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு.
நல்லாட்சிக் காலத்தில் இதனை வெளிப்படையாக தரிசிக்க முடிந்தது. புலம்பெயர் செயற்பாடுகளைக் கேட்டால் இது பற்றி பல கதைகளைக் கூறுவர். எனவே சுமந்திரனோ, தமிழரசுக் கட்சியோ தனித்துச் செல்லாமல் குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.
சுமந்திரன் ஒருங்கிணைந்த செயற்பாட்டை சம்மதிப்பார் எனக் கூற முடியாது. கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர்; சிறீPதரனை அழைத்துச் செல்வார் எனவும் எதிர்பார்க்க முடியாது
தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. அது குறிப்பாக ஆறு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துதல், அரசியல் கைதிகளை உடன் விடுவித்தல், புதிய அரசியல் யாப்புப் பணிகளை விரைவாக ஆரம்பித்தல், உண்மை ஆணைக் குழுவை உடனடியாக ஆரம்பித்தால், பெருந்தோட்டத் துறையில் நிலவும் நிச்சயம் நவீன அடிமைத்துவ நெருக்கடிகள் குறித்து அவதானம் செலுத்துதல் என்பவையே அந்த ஆறு நிபந்தனைகளுமாகும். இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற காலவரையறைகளை விதிக்குமாறு கேட்டுள்ளது.
மலையக மக்கள் தொடர்பாக மலையகத் தொழிலாளர்களுக்கென அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு செயன்முறைகளின் பற்றாக்குறை, நாளாந்த ஊதியம் பெறுவோர் புதியதொரு வணிகத்திட்டத்தினூடாக பெருந்தோட்டத் துறையின் பங்காளிகளாக நிலை மாற்றப்படாமை, பின்தங்கிய நிலையிலுள்ள மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், பொது நிர்வாகம் சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் தேசிய நீரோட்டத்தில் உள் வாங்கப்படாமை என்பவற்றை விசேடமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சுட்டிக்காட்டல்கள் மலையக மக்கள் தொடர்பான சர்வதேச அபிப்பிராயம் உருவாக்கத்தில் பாரிய பங்களிப்பை வழங்கும். மலையக மக்களை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும. உலகத்தை மலையகத்திற்கு கொண்டுவர வேண்டும். இந்தப் பணி இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனலாம்.
முன்னரும் கூறியது போல தமிழ்த் தரப்பின் இது தொடர்பான செயல்பாடு மிகவும் பலவீனமானதாகவே உள்ளது. இதனை எப்படியாவது மாற்றியமைக்க வேண்டும். தமிழ்க்கட்சிகளுக்கு தற்போது கட்சியின் உள்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே நேரம் போதியதாக இல்லை.
இந் நிலையில்; விஞ்ஞானபூர்வமாக வினைத்திறனுடன் இந்தப் பணிகளையாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. சிவில் தரப்புத் தான் இதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
முதலில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இது தொடர்பான உரையாடல்களை சகல மட்டங்களிலும் ஆரம்பிக்க வேண்டும்.
இதற்கென ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்கி செயற்படுதல் நல்லது. ஆய்வுக்குழு தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை உருவாக்கி அதனை விவாதத்திற்கு விடுத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தல் வேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் செயற்படுமாறு தமிழ்க் கட்சிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். நேரடியாகவும் ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்துக்கு இதனை அனுப்பலாம்.
இந்த விவகாரத்தில் சுமந்திரனின் தனி ஓட்டத்திற்கு இடமளிக்கக்கூடாது.
சி.அ.யோதிலிங்கம்