பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கி இந்தியா தவறிழைத்துவிட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். “இதற்கு அவர்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.

பாகிஸ்தான் பின்வாங்கி விடும் என இந்தியா நினைத்திருந்ததாகவும், ஆனால் “தங்கள் நாட்டுக்காக போராடத் தெரிந்த தேசம் இது என்பதை இந்தியா மறந்துவிட்டது” என அவர் கூறினார்.

தங்கள் நாட்டு பாதுகாப்புப் படைகள் இந்தியாவின் தாக்குதலை எதிர்த்ததாகக் கூறினார். அப்போது, இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த கூற்றை இந்தியா உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவின் தாக்குதலுக்கு “எங்கள் தரப்பிலான பதிலடி அது” என பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.

இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், தன் தாய் மற்றும் சகோதரனுடன் வீட்டில் இருந்தபோது ஏழு வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் நாங்கள் பழிதீர்ப்போம் என நான் சத்தியம் செய்கிறேன்.”

 

இந்தியாவின் தாக்குதல்களை “கோழைத்தனமானவை” என அவர் விவரித்தார். மேலும், தங்கள் நாடு எதிர்த்து சண்டையிடும் என்பதை நேற்றிரவு காட்டியதாகவும் அவர் கூறினார்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒரு மணிநேரத்துக்குள் “தொடர்ச்சியாக சண்டை” நிகழ்ந்ததாக அவர் கூறினார். அது தங்களின் தைரியத்தைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

“எங்களை தாக்கியவர்கள் மற்றும் எதிரிகளின் போர் விமானங்களை எங்களின் படைகள் அழித்தன” எனவும் அவர் கூறினார். இந்திய விமானங்களை பாகிஸ்தான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மீண்டும் அவர் குறிப்பிட்டார், ஆனால் இதுகுறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

மேலும் பேசிய அவர், “பாகிஸ்தான் மக்களே, உங்களின் சொந்த பாதுகாப்புக்காக மக்களும் ராணுவமும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக (இந்தியாவுக்கு) நின்று வெற்றி பெறுவோம்.”

நாட்டின் பாதுகாப்புக்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் தனக்கு தேவை எனக்கூறி அவர் தன் உரையை முடித்தார். “ஏனெனில் நாம் உண்மைக்காக போராடுகிறோம், கடவுள் நம்முடன் எப்போதும் உடன் நிற்பார் என நம்புகிறேன்.”

“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா இன்று அதிகாலை அறிவித்தது.

“பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இந்திய அரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply