அணு ஆயுத அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக இரண்டு போர்களிலும் சில கட்டுப்படுத்தப்பட்ட மோதல்களிலும் ஈடுபட்டிருக்கின்றன.

இரு நாடுகள் இடையிலான காஷ்மீர் தொடர்பான மோதல் பல்லாண்டுக் காலமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சச்சரவு ஏன்? அது எப்படி தொடங்கியது?

காஷ்மீருக்கான மோதல் எவ்வளவு காலமாக நீடிக்கிறது?

இனரீதியாக பன்முகத்தன்மை வாய்ந்த இமாலய பிரதேசமான காஷ்மீர், அழகுவாய்ந்த ஏரிகள், புல்வெளிகள் மற்றும் பனி போர்த்திய மலைகளுக்குப் பிரபலமான பகுதியாக உள்ளது.

கடந்த 1846ஆம் ஆண்டில் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதியாக காஷ்மீர் உருவாக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1947இல் பிரிட்டனிடம் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து இந்தப் பகுதி தொடர்பாக சச்சரவு நீடிக்கிறது.

இந்திய சுதந்திர சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான திட்டத்தின்படி, முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீருக்கு, இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் இருந்தது.

அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் 1947இல் சுதந்திரம் பெற்ற பிறகு, அப்போது மன்னராட்சியின் கீழ் இருந்த பகுதிகள் எந்த நாட்டுடன் இணைய விரும்புகின்றன என்பதை அப்பகுதிகளை ஆண்ட மன்னர்களே தேர்ந்தெடுக்கும் படியாக இருந்தது.

முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரை ஆண்ட இந்து மன்னரான ஹரி சிங், இதுதொடர்பாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தார்.

அந்த நேரத்தில் போக்குவரத்து மற்றும் இதர சேவைகள் தொடர்வதற்காக பாகிஸ்தானுடன் அவர் ஓர் “இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை” (standstill agreement) ஏற்படுத்தினார்.

அக்டோபர் 1947இல் பாகிஸ்தானின் பூர்வகுடிகள் (tribesmen) காஷ்மீரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவதாக வந்த செய்திகள் மற்றும் ஹரி சிங்கின் தாமதப்படுத்தும் “சூழ்ச்சி திறனால்” தூண்டப்பட்டு காஷ்மீருக்குள் படையெடுத்தனர். அந்தச் சமயத்தில் இந்திய ராணுவத்தின் உதவியை ஹரி சிங் கோரினார்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன், காஷ்மீரின் நிலை குறித்த வாக்கெடுப்பு நடைபெறும் வரை தற்காலிகமாக இந்தியாவுடன் இணைந்தால் அங்கு அமைதி நிலவும் என நம்பினார்.

இதையடுத்து, அதே மாதத்தில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான (Instrument of Accession) ஒப்பந்தம் ஒன்றை ஹரி சிங் ஏற்படுத்தினார். அதன்படி காஷ்மீரின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் இணைவதை ஹரி சிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து போர் வெடித்தது. அப்போது, இதுதொடர்பாக ஐ.நா. தலையிடுமாறு இந்தியா கேட்டுக்கொண்டது.

காஷ்மீர், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது தொடர்பான கேள்விக்கு விடை காண வாக்கெடுப்பு நடத்துமாறு ஐ.நா பரிந்துரைத்தது. இருப்பினும், வாக்கெடுப்பு நடக்காமல் அப்பகுதியில் இருந்து ராணுவத்தை அகற்றுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜூலை 1949இல், ஐ.நா. பரிந்துரைத்து இருந்ததன்படி, ஒரு போர் நிறுத்த எல்லையை (ceasefire line) நிர்ணயிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.

உயர்ந்த மலைகள் மற்றும் புல்வெளிகள் காரணமாக காஷ்மீரை இந்தியாவின் சுவிட்சர்லாந்து எனப் பலரும் கருதுகின்றனர்

இதன் பிறகு, 1965இல் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. பின்னர், 1999இல் பாகிஸ்தான் ஆதரவுப் படைகளுடன் சிறிய, ஆனால் மோசமான மோதலை இந்தியா எதிர்கொண்டது. அந்தச் சமயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாக அறிவிக்கப்பட்டன. அதேபோன்று, 2022இல் இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு மிக நெருக்கமாக வந்தன.

கடந்த 1972இல் போர்நிறுத்த எல்லையை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக அறிவிக்கும் வகையிலான சிம்லா ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்படுத்தின.

தற்போது, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் முழுவதையும் உரிமை கோருகின்றன. ஆனால் இரு நாடுகளும் சில பகுதிகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன.

பல்வேறு கட்ட சச்சரவுகளுக்கு மத்தியில் கடந்த 2008ஆம் ஆண்டில் 60 ஆண்டுகளில் முதன்முறையாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வர்த்தகத்தை இரு நாடுகளும் திறந்துவிட்டன.

 

ஜம்மு-காஷ்மீரில் ஏன் அதிகமாக அமைதியின்மை நிலவுகிறது?

காஷ்மீர் மோதலில் மதம் முக்கியப் பங்கு வகிக்கிறது

காஷ்மீருக்குள் இதுதொடர்பான கருத்துகள் மாறுபட்டவையாக உள்ளன.

அமைதியின்மைக்கு மதம் ஒரு காரணியாக உள்ளது: ஜம்மு-காஷ்மீரில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதனால் இந்தியாவிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியாக இது உள்ளது.

கடந்த 1989 முதலே அப்பகுதியில் இந்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டுகிறது. இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகான ஆண்டுகளில், ஆயுத தாக்குதல்கள் குறைந்து, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.


மிகவும் ராணுவமயப்படுத்தப்பட்ட பகுதியாக காஷ்மீர் உள்ளது

கடந்த 2016ஆம் ஆண்டில் உரியில் இந்திய படையினர் 19 பேர் கொல்லப்பட்ட பிறகு இந்தியா, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” எனும் தாக்குதலை நடத்தியது. அதில், தீவிரவாதிகளின் தளங்கள் எனக் கூறப்படும் இடங்களை இலக்கு வைத்து தாக்கியது.

புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது, பாலகோட்டில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தூண்டியது. இது 1971க்கு பிறகு பாகிஸ்தானுக்கு உள்ளே நிகழ்ந்த முதல் நடவடிக்கையாக உள்ளது. இதைத்தொடர்ந்து, பதில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றன.

அதன் பிறகு, ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 2025இல் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது.

இந்தத் தாக்குதல் நிகழ்ந்து இரு வாரங்கள் கழித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது, இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

உலகிலேயே மிக அதிகமாக ராணுவமயப்படுத்தப்பட்ட பகுதியாக காஷ்மீர் உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுமா?

, கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் அமைதியை நிலைநாட்டுவோம் என உறுதியளித்தனர்.

கடந்த 2003ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் மீது கடுமையான அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் ஆட்சிக்கு வந்தார். அதேநேரம் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும் ஆர்வம் காட்டினார்.

பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் டெல்லியில் மோதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஆனால், ஓர் ஆண்டு கழித்து பஞ்சாபின் பதான்கோட்டில் இந்தியாவின் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குழுக்கள் மீது இந்தியா குற்றம் சாட்டியது.

2017இல் பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ள முன்பே திட்டமிட்டிருந்த பயணத்தையும் மோதி ரத்து செய்தார்.

அப்போதிருந்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

 

Share.
Leave A Reply