டெஹ்ரான்: ஈரானில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலைக்கிடையே, அந்த நாட்டில் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

குறிப்பாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை எனப்படும் ஐஆர்ஜிசி,(The Islamic Revolution Guards Corps (IRGC)) நாட்டின் முக்கிய முடிவுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரானில் உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட மொஜ்தபா காமேனியின் இருப்பிடம் குறித்து தெளிவான தகவல் இல்லாதது இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அவர் பொதுவெளியில் தோன்றாததும், நேரடியாக எந்த உரையும் நிகழ்த்தாததும் உலக அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தகவலை ஈரான் தரப்பு மறுத்துள்ளது. இதனால், அந்த நாட்டின் நிர்வாக முடிவுகளை யார் எடுத்து வருகின்றனர் என்ற கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஈரானில் அதிபராக உள்ள மசூத் பெசெஷ்கியன் மற்றும் ராணுவ அமைப்பான ஐஆர்ஜிசி இடையே அதிகார போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த போட்டியின் காரணமாக, தற்போது நாட்டின் நிர்வாக அதிகாரங்கள் பலவும் ஐஆர்ஜிசி கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை ஐஆர்ஜிசியே முன்னின்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி, நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளிலும் அந்த அமைப்பு அதிக செல்வாக்கு செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போரின் தொடக்க நாளிலேயே நடைபெற்ற தாக்குதல்களில், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

அதன் பின்னர், அவரது மகனான மொஜ்தபா காமேனி புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அவர் அறிவிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அவர் உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகமும் சில இடங்களில் எழுந்துள்ளது. அவரிடமிருந்து வரும் தகவல்கள் அனைத்தும் நேரடி உரையாக இல்லாமல், தொலைக்காட்சிகளில் வாசிக்கப்படும் அறிவிப்புகளாக மட்டுமே வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மொஜ்தபா காமேனி உடல்நிலை மோசமாக இருக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கலாம் என்று அமெரிக்க தரப்பில் சிலர் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சில தகவல்களில் அவர் கடுமையாக காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஈரானில் ராணுவ அமைப்பான ஐஆர்ஜிசியின் செல்வாக்கு அதிகரித்து வருவது அந்த நாட்டின் அரசியல் நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக அரசியல் நிர்வாகத்தை விட ராணுவ அமைப்புகள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டால், அது நாட்டின் எதிர்கால அரசியல் மற்றும் போர் நிலவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ஈரானில் நடந்து வரும் போர் சூழ்நிலையுடன் சேர்ந்து, அதிகார அமைப்புகளுக்குள் உருவாகியுள்ள இந்த மாற்றங்கள் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் ஈரானில் யார் உண்மையான அதிகாரம் செலுத்துகின்றனர் என்பது தெளிவாகும் என சொல்கின்றனர் உலக அரசியல் பார்வையாளர்கள்.

 

Share.
Leave A Reply