சாரா ஜெஸ்மின் விடயத்தில் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார்.
மூன்று டி.என்.ஏ பரிசோதனைகள் செய்திருந்தால், அந்த டி.என்.ஏ யாருடையது? கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் ‘உங்களின் மகள் இறக்கும்போது இரண்டு மாத கர்ப்பிணி, அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது’ என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.
இதனை திசைதிருப்ப சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகங்கள் உள்ளன என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுகின்றோம்.
கட்சி பேதமின்றி அரசாங்கத்திற்கு நன்றியை கூறிக்கொள்கின்றோம். சுரேஷ் சலே போன்றவர்களை கைது செய்வார்களா? என்ற சந்தேகம் கடந்த காலங்களில் காணப்பட்டது. ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரவேற்கிறோம்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் உதய கம்மன்பில நூல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இதுபோன்ற ஒரு புத்தகத்தை ‘ வேட்டை’என்ற பெயரில் பிள்ளையான் எழுதியிருந்தார்.
ஆனால் அவர் புத்தகத்தை எழுதக்கூடிய நிலையில் இருக்கும் ஒருவரா? இல்லையா? என்று நாட்டில் அனைவருக்கும் தெரியும். எவ்வாறாயினும் இந்த புத்தகத்தை ரொஹான் குணரட்ன என்ற நபரே எழுதியுள்ளார்.
இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். இந்த புத்தகத்திற்கு ஒருவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ரொஹான் குணரட்ன எழுதியுள்ளதுடன், அதனை பிள்ளையான் வெளியிட்டார்.
இப்போது அதுபோன்ற புத்தகத்தையே கம்மன்பிலவும் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் தொடர்பிலும் எமக்கு சந்தேகங்கள் உள்ளன.
முக்கியமான விடயம் என்னவென்றால் ரொஹான் குணரட்ன என்ற நபரின் அலுவலகம், பத்தரமுல்ல கடவுச்சீட்டு அலுவலக கட்டடத்துக்கு அருகில் இருந்தது.பிள்ளையானின் புத்தகத்திற்கு தேவையான தகவல்களை வழங்க திரிபொலி தரப்புடன் தொடர்புடைய ஓட்டமாவடியை சேர்ந்த கலீல் என்ற நபரே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கலீல், 2015-2019 காலத்தில் பிள்ளையானுடன் ஒன்றாக சிறையில் இருந்தார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முறையாக நடக்க வேண்டும் என்று அரசாங்கத்தினால் ஜனாதிபதி மட்டத்தில் ஆர்வமாக இருந்தாலும் பொலிஸார் தொடர்பில் என்னால் சான்றுகளை வழங்க முடியாது.
அதற்கு காரணம் பொலிஸில் உள்ள குழுவொன்று இந்த விசாரணையை திசைத்திருப்ப அல்லது இந்த விசாரணையை தவறான பக்கத்திற்கு கொண்டு செல்ல இன்றும் முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் காணப்படுகிறது..
இதேவேளை இஸ்மயில் இசாக் என்ற நபர் தொடர்பில் நான் இந்தப் பாராளுமன்றத்துக்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்.
இந்த நபர் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி இந்த நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதன்படி இவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சிலர் சாட்சியாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை சந்திக்கும் போது கீழ்மட்ட அதிகாரிகள் அதற்கு கோபப்பட்டு அதனை திசை திருப்புகின்றனர்.
இதனால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சாட்சியங்கள் தொடர்பான விளக்கங்களை பொலிஸாரே முன்வைக்கின்றனர். இதனால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
சாரா ஜெஸ்மின் விடயத்தில், தன்னிடம் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார். மூன்று டி.என்.எ பரிசோதனைகள் செய்திருந்தால்,மூன்றாவது டி.என்.எ யாருடையது?
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் உங்களின் மகள் இறக்கும் போது இரண்டு மாத கர்ப்பினி என்றும், அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதனை திசை திருப்ப சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா, என்ற சந்தேகங்கள் உள்ளன.
அத்துடன் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னரும் இரண்டு ஆவணப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

