தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு முரணாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. த.வெ.க. ஆட்சியமைக்கும் என்று ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பு மட்டுமே கூறியது. மற்ற கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுகவுக்கு சாதகமாகவே களம் இருப்பதாக குறிப்பிட்டன. வழக்கம் போல் திமுக – அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் பிரதான போட்டி இருக்கும் என்றே அந்த கணிப்புகள் கூறியிருந்தன.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் இதற்கு முற்றிலும் மாறானதாக உள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். திமுக செல்வாக்கு மிக்கதாக கருதப்பட்ட சென்னையிலேயே அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
முப்பதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அரசியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்க காரணமான 5 முக்கிய விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1. ‘பொய்த்துப் போன திமுக எதிர்பார்ப்பு’
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பெரும்பாலான பேட்டிகள் மற்றும் பிரசாரங்களில் மகளிரை முன்னிறுத்தி தங்கள் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தினார்.
குறிப்பாக “குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பேருந்து பயணம் (பெண்களுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணம்) , பள்ளிகளில் காலை உணவு திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ₹1,000 நிதியுதவி வழங்கும் திட்டமான புதுமைப் பெண் திட்டம்” உள்ளிட்ட திட்டங்களை முதன்மையானவையாக அவர் பட்டியலிட்டார்.
இது தவிர உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையிலான தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் மற்றும் வெகுஜன மக்களுக்கு பலன் தரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்களையும் திமுக தங்களின் சாதனையாக முன்னிறுத்தியது.
திமுகவின் மகளிர் நலத்திட்டங்கள் தேர்தலில் பலன் கொடுக்கவில்லையா?
திமுகவின் மகளிர் நலத்திட்டங்கள் தேர்தலில் பலன் கொடுக்கவில்லையா?
ஆனால் இந்த திட்டங்கள் வாக்குகளை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவில்லை என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, திமுக மட்டுமின்றி மற்றொரு திராவிட கட்சியான அதிமுகவும் தொடக்கம் முதலே மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.
என்றாலும் ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்கு பிறகான கால கட்டத்தில் 2016க்கு முன்பு வரை திமுக மற்றும் அதிமுக இடையே மாற்றி மாற்றி ஆட்சியை மக்கள் கொடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். நலத்திட்ட அடிப்படையிலான வாக்கு வங்கி தமிழ்நாட்டு அரசியலில் எப்போதுமே இல்லை என்று கூறிய அவர் எந்த கட்சி வந்தாலும் இதுபோன்ற முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்களை தொடர்ந்தே வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது பற்றி பேசிய பத்திரிகையாளர் திவ்யா சந்திரபாபு, “பெண்கள் வாக்குவங்கி எப்போதுமே கடந்த காலங்களில் திமுகவுக்கு ஆதரவாக இருந்தது இல்லை” என்பதோடு, இதனை குறிவைத்தே 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் மகளிர் நலத்திட்டங்களில் திமுக கவனம் செலுத்தியது என கூறுகிறார். விஜய் கவர்ந்த வாக்குகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கக் கூடும் என்பதும் அவரது கூற்றாக உள்ளது.
ஒரு வகையில் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் திமுக எதிர்பார்த்ததற்கு மாறாக, எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. பிபிசியின் மக்கள் குரல் கள ஆய்வு நிகழ்ச்சியில் பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள், இலவச பேருந்து பயண திட்டங்களால் தங்களுக்கு வருவாய் குறைந்துள்ளதாகக் கூறினர்.
2. திமுக எதிர்ப்பை கையில் எடுத்த விஜய் – கண்டுகொள்ளாத திமுக

இந்த தேர்தலில் தனது பிரசாரத்தை தொடங்கியது முதலே திமுகவையே தனது பிரதான எதிரியாக முன்னிறுத்தினார். குறிப்பாக “இந்த தேர்தலில் இரண்டே இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி, ஒன்று டிஎம்கே. மற்றொன்று டிவிகே” என்ற விஜயின் பேச்சை த.வெ.க.வினர் சமூகவலைத்தளங்களில் மறுபகிர்வு செய்தனர்.
இதனை ஒரு முழக்கமாகவும் விஜய் மாற்றினார். தனது பிரசார மேடைகளில் திமுகவை கடுமையாக சாடினார். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் மரணம் போன்ற சம்பவங்களுக்கும் திமுகவே காரணம் என விஜய் குற்றம் சாட்டினார். (கரூர் நெரிசல் மரணம் குறித்த வழக்கில் காவல்துறை அறிக்கைகள் இதற்கு முரணாக இருந்தன. இவ்வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது.)
ஆனால் திமுகவின் பிரதான தலைவர்கள் விஜயை எதிர்த்து நேரடியாக கருத்து கூறவே இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் விஜய் பற்றிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்தார்.
விஜய்க்கு எதிரான திடமான அரசியலை திமுக முன்னெடுக்காததும், இத்தகைய தேர்தல் முடிவுகளுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் பத்திரிகையாளர் மணி. பிபிசியிடம் பேசிய அவர், விஜயை நேரடியாக விமர்சிக்காதது மட்டுமின்றி விஜய்க்கு வாக்களிப்போம் என்று கூறிய வாக்காளர்கள் சமூகவலைத்தளங்களில் குறிவைக்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக விஜய் ஆதரவாளர்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் சமூகவலைத்தளங்களில் விமர்சித்தது திமுகவுக்கு எதிராக மாறியிருக்கக் கூடும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
மற்ற கட்சியினர் இத்தகைய விமர்சனங்களை செய்திருந்தாலும், திமுகவுக்கே இது பாதகமாக அமைந்தது என்பது அவரது கூற்றாக உள்ளது.
3. ‘ஆட்சிக்கு எதிரான மனநிலையை சாதகமாக பயன்படுத்திய விஜய்’

தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்படாத விஜயின் பலம் காரணமாக, ஆட்சிக்கு எதிரான மனநிலையை எந்த அளவுக்கு வாக்குகளாக அறுவடை செய்யும் நிலையை எட்டுவார் என்பதை பிரதான கட்சிகள் கணிக்கத் தவறியிருக்கக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், த.வெ.க.வுக்கு தமிழ்நாட்டில் கட்சிக் கட்டமைப்பு இல்லை என்பதையும் தாண்டி தேர்தலில் சிறப்பான செயல்பாட்டை கொடுத்திருக்கிறது என்றார்.
“ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிய அளவில் இருக்கிறது என்பதன் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவுகளாக இருக்கக் கூடும்.” என்கிறார். குறிப்பாக “குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு போன்ற குற்றச்சாட்டுக்களின் விளைவாக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் விஜய்க்கு சென்றடைந்துள்ளன” என்பதும் அவரது கூற்றாக உள்ளது.
விஜயின் வாக்கு வங்கி தேர்தல் அரசியலில் சோதிக்கப்படாத ஒன்று என்ற போதிலும், தமிழ்நாடு முழுமைக்கும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று குறிப்பிடும் கோட்டீஸ்வரன், இதனால் “திமுக அரசு மீதான எதிர்ப்பு மனநிலையை விஜய் சாதகமாக பயன்படுத்தியுள்ளார்” என்கிறார்.
காலை நேரத்தில் தபால் வாக்குகளிலேயே த.வெ.க. முன்னிலை பெற்றதை சுட்டிக்காட்டிய அவர்,”பெண்கள், அரசு ஊழியர்கள் என திமுகவின் வாக்கு வங்கியிலேயே விஜய் கை வைத்திருக்கிறார்” என தமது கணிப்பை வெளிப்படுத்தினார்.
“தேர்தலுக்கு முன்பாக விஜயை பல கட்டங்களில் திமுக மற்றும் அதிமுக குறைத்து மதிப்பிட்டிருக்கக் கூடும். ஒருவேளை சரியாக மதிப்பிட்டிருந்தால் தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்திலும், வியூகத்திலும் சில மாற்றங்களை செய்திருக்கக் கூடும்” என்பதும் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரனின் கருத்தாக உள்ளது.
ஆட்சி மீதான அதிருப்தி அலையை தனக்கான வாக்கு வங்கியாக மாற்றுவதில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார் என்கிறார் பத்திரிகையாளர் மாலன்.
2026 தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்தது குறித்து பேசிய மாலன்,”தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் மக்கள் உற்சாகமாக வாக்களிப்பதை காண முடிந்தது. ஆனால் இதனை எஸ்ஐஆரில் நிகழ்ந்த மாற்றம் காரணமாகவே வாக்குப்பதிவு அதிகரித்து என்பது போன்ற கருதுகோள்களும் முன்வைக்கப்பட்டன” என்கிறார்.
ஆனால் தேர்தல் முடிவுகளை பார்க்கையில் தன்னைப் பொறுத்தவரை மாற்றத்திற்கான வாக்குகளாகவே அவற்றை தான் கருதுவதாக மாலன் கூறுகிறார்.
4. ‘கூட்டணி விஷயத்தில் தப்புக்கணக்கு’
திமுக கூட்டணியிலும் சரி அதிமுக கூட்டணியிலும் சரி அவற்றில் இருந்த தேசிய கட்சிகளுக்கு கொடுத்த தொகுதிகள் குறித்த பொதுவான விமர்சனம் இருந்தது.
இப்போது திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் மிகக் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது.
அந்த தொகுதிகளில் எல்லாம் த.வெ.க. பெருமளவில் வாக்கு பெற்றிருப்பதை முன்னிலை நிலவரங்களில் பார்க்க முடிகிறது.
இதே போன்று கூட்டணி விஷயத்தில் தி.மு.க., அதிமுக, என இரு கட்சிகளுமே போட்ட கணக்கு தவறியிருக்கிறது. தற்போதைய தேர்தலில் “விஜய் என்ற ஒற்றை காரணி அலையாக மாறி த.வெ.கவுக்கு பெரிய அளவிலான வாக்குகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது” என பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் திவ்யா சந்திரபாபு கூறினார்.
5. ‘இடம் மாறிய தலித் வாக்குகள்’
தலித் இளைஞர்களின் வாக்குகள் பெரும்பாலும் விஜய்க்கு செல்லும் என்பதை தான் முன்பே எதிர்பார்த்ததாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் மணி.
இது தொடர்பாக பிபிசி தமிழ் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி உடனான நேரலை கலந்துரையாடலில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் இழந்த வாக்குகளை த.வெ.க. பெற்றிருக்கக் கூடும் என மணி கருதுகிறார். இளைஞர் வாக்குகளை பெறுவதில் தவெக சாதித்திருப்பதாக பத்திரிகையாளர் திவ்யா சந்திரபாபுவும் ஆமோதிக்கிறார்.

