ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் வாள் வெட்டுக்கு இலக்காகி கையில் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.
சங்கானையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகரே (வயது – 35) வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
“கீரிமலைப் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை நடத்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணி சம்பவ இடத்துக்குச் சென்றது.
பொலிஸாரின் வருகையை அறிந்து வன்முறையில் ஈடுபட்டோர் தப்பி ஓடினர். அவர்கள் மறைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வீட்டின் படலையைத் திறந்து உள்ளே செல்ல முற்பட்ட போது, உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தடுக்க முற்பட்ட அவருக்குக் கையில் வெட்டு விழுந்தது.
சம்பவத்தையடுத்து பொலிஸ் அலுவலகரை வாளால் வெட்டியவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
உப பொலிஸ் பரிசோதகர், கையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.