வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டனர்.
நேற்று மாலை 5 மணியளவில் குறித்த வர்த்தகர் வர்த்தக நடவடிக்கையை முடித்து வீடு திரும்பியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முகக்கவசத்துடன் சென்ற இருவர் பரந்தன் பூநகரி வீதியில் உள்ள தம்பிராய் பகுதியில் வழிபறியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகதின் தொலைபேசி மற்றும் பணப்பையை பறித்து இருவரும் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர். அவ்வீதியால் பயணித்த சிலரிடம் விடயத்தை பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த இருவரையும் துரத்திச் சென்ற பொது மக்கள், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயற்சித்த நிலையில், முட்கொம்பன் பகுதிக்குள் சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
முட்கொம்பன் காரியன் கட்டுக்குளம் பகுதியினூடாக தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த இருவரையும் பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நையப்புடைந்த மக்கள் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த பரந்தன் பூநகரி வீதியில் அண்மைக்காலமாக வழிபறி சம்பவங்கள் பதிவாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புக்கள் குறைவாக உள்ளதை சாதமமாக பயன்படுத்தி இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.