சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் தியத்தலாவவுக்கு சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீபுக்கு அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, தியத்தலாவ பயிற்சி முகாம் தளபதி பிரிகேடியர் ராஜகுரு ஆகியோர் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை வரவேற்றனர்.
இதையடுத்து நடந்த நிகழ்விலேயே சிறிலங்கா படையினரின் பயிற்சிக்குத் தேவையான எட்டு உயர் ரக குதிரைகளையும், பிரிகேடியர் ராஜகுருவிடம், பாகிஸ்தான் தளபதி கையளித்தார்.
கூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை (படங்கள்)
நான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இன்று காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த போது, பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
சிறிலங்கா இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கும் தற்போதைய திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிறப்புப் படையினருக்கான இருதரப்பு பயிற்சி ஒத்திகைகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
