இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கு என்றுமில்லாத வகையில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்த தேர்தலில் 20 ஆசனங்களைப் பெறுவதன் ஊடாக பாராளுமன்றத்தில் அசைக்க முடியாத பேரம் பேசும் பலத்தைப் பெற்றுக் கொண்டு, அரசியல் தீர்வு ஒன்றுக்கான பெரும் பாய்ச்சலை நடத்துவதே தமது இலக்கு என்கிறது கூட்டமைப்பு.
அத்தகைய பெரும் பாய்ச்சலுக்கான ஆசனங்களில் பெரும்பாலானவற்றுக்கு, கூட்டமைப்பு பெரிதும் நம்பியிருப்பது வடக்கு மாகாணத்தைத் தான். யாழ்ப்பாணத்தில் 07 ஆசனங்களும், வன்னியில் 6 ஆசனங்களுமாக மொத்தம், 13 ஆசனங்களை வடக்கு மாகாணம் கொண்டிருக்கிறது.
இதில், வன்னியில் முஸ்லிம்களுக்கு கிடைக்கக் கூடிய ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களைத் தவிர்த்து, கூட்டமைப்புக்கு அதியுச்சமாக இலக்கு வைக்கக் கூடிய ஆசனங்கள் 11 அல்லது 12 ஆகும்.
இவற்றில் குறைந்தபட்சம் 10 ஆசனங்களையாவது கைப்பற்றி விடவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்காகும்.
ஆனால், வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவ்வளவு சவால் கள் இல்லாவிடினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முடக்குவதற்கான தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த தேர்தல்களில் ஈ.பி.டி.பி.யை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய சவாலாக இருந்து வந்தது.
அதிகார பலம், பணபலம், ஆகியவற்றின் மூலமும் சலுகை அரசியலினாலும், கூட்டமைப்பை வீழ்த்தி விடுவதற்கு மஹிந்த ராஜபக் ஷ கடும் முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டி கடுமையானதாக இருந்தாலும், அரச பின்புலத்துடனான சக்திகளை எதிர்கொள்வது இலகுவானதாக இருந்தது.
இம்முறை, அப்படியல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்களக் கட்சிகளுடனும் மோத வேண்டியிருக்கிறது-. தமிழ்த் தேசியவாதக் கட்சிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் நிற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய கட்சிகள் அனைத்துமே, குறைந்தபட்ச ஆசனக் குறிக்கோளைத் தான் கொண்டிருப்பவை என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும் தாருங்கள் என்று கோரியது. அது கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. அவர்களுக்கு ஒன்றிரண்டு ஆசனங்கள் குறைவாக கிடைக்கலாம் என்று தெரிந்திருக்கக் கூடும்.
ஆனாலும், உயர்ந்தபட்ச ஆசனக் கணக்கு ஒன்றை நிர்ணயிக்கும் பலத்தை கூட்டமைப்புக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கூட்டமைப்புடன் மோதும், ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஈ.பி.டி.பி. போன்ற கட்சிகளாகட்டும், அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் போன்ற கட்சிகளாகட்டும், ஒரு ஆசனத்துக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொள்ளவில்லை.
இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை அதிகபட்சம் மூன்று ஆசனங்களைத் தான் எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றன. ஆனா லும் கிடைக்கும் என்று உள்ளுக்குள் நம்புவது ஒரு ஆசனத்தை மட்டும் தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக- இந்த ஐந்து அரசியல் கட்சிகளும் பிரசார யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன.
அதற்குக் காரணம், மிகப்பெரிய வெற்றி வாய்ப்புள்ள கட்சி அது தான்.
அதன் வாக்கு வங்கியை உடைத்து, வாக்குகளைப் பகிர்ந்து கொள்வது தான் இந்தக் கட்சிகளின் நோக்கம். ஏனென்றால், மேற்கூறப்பட்ட ஐந்து கட்சிகளுக்கும் பெரியளவில் நிலையான வாக்கு வங்கி ஏதும் இருப்பதாக கூற முடியாது.
எனவே, வெற்றிக்காக அவர்கள் கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சுரண்டியாக வேண்டும். அதனால் தான் எல்லாப் பக்கத்தில் இருந்தும் கூட்டமைப்புக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதற்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது, வாக்காளர்களின் கைகளிலும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கூட்டமைப்பின் பிரசாரங்களிலும் தான் தங்கியிருக்கின்றன.
கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சுரண்டுவதற்காக மட்டும் தான், ஏனைய கட்சிகள் கூட்டமைப்பை நோக்கி ஒரே திசையில் தாக்குகின்றனவா அல்லது, அவையனைத்தும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட முனைகின்றனவா என்றும் பார்க்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்தல் என்ற மூலோபாயம், சாதாரணமாக கட்சி மட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமாகத் தெரியவில்லை.
அதற்கு அப்பால் பல மட்டங்களில் இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்கப்படுவதாகவே தெரிகிறது.
வரும் பாராளுமன்றம் யாருக்கும் பெரும்பான்மையை கொடுக்காத ஒன்றாக- அமைவது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான கட்சியாக உருவெடுப்பதை, எந்தத் தரப்புமே விரும்புவதாகத் தெரியவில்லை.
அது கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அடிபணியும் நிலை ஒன்றை உருவாக்கி விடும் என்று பிரதான சிங்களக் கட்சிகள் மட்டும் சிந்திக்கவில்லை. ஏனைய சிங்களக் கட்சிகளுக்கும் அதே நிலைப்பாடு உள்ளது.
அதாவது கொழும்பு அரசியலின் ஸ்திரமான சக்தியாக கூட்டமைப்பு மாறுவதை, சிங்களப் பேரினவாத சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.
அதேவேளை, தமிழ் மக்களின் வலுவான பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறுவதை புறச்சக்திகளும் விரும்புவதாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தது போன்ற ஒரு வலுவான நிலையில், தமிழர் தரப்பு இருக்கும் வரைக்கும், முக்கியமான விவகாரங்களில், தமது இழுப்புக்கெல்லாம் ஆடுகின்றவர்களாக அவர்களை மாற்ற முடியாது என்ற கணிப்பு புறச்சக்திகளிடம் காணப்படுகிறது.
இத்தகைய கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக மாற்றம் பெறுவதை, வலுப்பெறுவதை புறச்சக்திகள் விரும்பவில்லையா? என்ற சந்தேகம் தோன்றுகிறது.
ஐ.நா. விசாரணை அறிக்கையின் பின்னரான இலங்கை மீதான நடவடிக்கை, குறைந்தபட்ச அழுத்தத்தைக் கொடுக்கும் ஒன்றாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக இருந்தால் மாத்திரமே அதனை உறுதியாக எதிர்க்க முடியும். இல்லாவிட்டால், ஒரு சிறிய கட்சியின் எதிர்ப்பு என்ற வகைக்குள் அது அடக்கப்பட்டு விடும்.
இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பிரதிதிகளாக ஏற்றுக் கொண்டு பேசிய சர்வதேச சமூகம், கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அவர்களை கைகழுவி விடும் முடிவை எடுக்கும்.
அதேவேளை, தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக பல கட்சிகள் தெரிவாகும் போது, அவை எல்லாவற்றுடனும் கலந்துரையாடப்படும் போக்கையும் சர்வதேச சமூகம் தவிர்த்துக் கொள்ளும்.
சர்வதேச சக்திகளைப் பொறுத்தளவில் பல்வேறு மட்டங்களிலும் தமது அரசியல் உரையாடல்களை வைத்துக் கொண்டாலும், அவற்றுக்கெல்லாம் அதிகாரபூர்வ அந்தஸ்த்தைக் கொடுக்காது.
இதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பின், நலன் தான் அடிபட்டுப் போகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான பலமுள்ள ஒரு தமிழ்த் தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டால் அல்லது அது மக்களின் செல்வாக்கைப் பெற்றால், தமிழர் நலனில் பாதிப்பு ஏற்படாது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரியளவில் தோல்வியை ஏற்படுத்தாமல், தாமும் பெரியளவில் வெற்றி பெறாமல்- ஓரிரண்டு ஆசனங்களுக்குள் முடங்கிக் கொள்ளும் அரசியல் கட்சிகளால், சர்வதேச அளவில் தமிழரின் ஒட்டுமொத்த நலனே பாதிக்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க கங்கணம் கட்டியுள்ள கட்சிகளும் தரப்புகளும், செய்யப்போவது, பாராளுமன்றத்தில் தமிழரின் பலத்தை குறைப்பது மட்டுமன்றி, சர்வதேச அரங்கிலும் தமிழரின் குரலை பலவீனப்படுத்துவதும் தான்.
கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் இலக்குடன் களமிறங்கியுள்ள கட்சிகள், வாக்குகளைப் பிரிப்பதால், ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது அவற்றைச் சார்ந்த கட்சிகளையே பாராளுமன்றத்தில் பலப்படுத்தப் போகின்றன. திருகோணம லையிலும், அம்பாறையிலும் தமிழரின் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலை கூடத் தோன்றலாம்.
இத்தகையதொரு நிலை ஏற்பட்டால், உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தமிழ ரின் குரல் ஒடுங்கும் நிலை ஏற்படும்.
கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழரின் நலனை முன்னிறுத்துதல் தான் முக்கியமானது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழர் நலன் என்ற மிகப்பெரிய விவகாரம், கட்சி அரசியலுக்குள்ளேயும், தனிப்பட்ட அரசி யல் நலன்களுக்குள்ளேயும் முடங்கிப் போயிருக்கிறது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் சிந்தித்து தமது தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
அவர்களின் தெரிவு எப்படி அமையப் போகிறது என்பதைப் பொறுத்தே, தமிழரின் தலைவிதி எப்படி மாறப் போகிறது என்பது தெரிய வரும்.
சத்ரியன்