கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் 82,020 பேர் உயிரிழந்துள்ளனர். 3,00,198 பேர் குணமடைந்துள்ளனர் என்று
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3,96,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில் 17,217 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 14,045 பேர் இறந்துள்ளனர்.
10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ். அங்கு இதுவரை 10,328 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் கோவிட்-19 தொற்றா?
தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வட கொரியா கூறி வருகிறது.
ஆனால் அங்கு 709 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனைகள் நடந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் 698 பேர் உள்நாட்டவர்கள் என்றும் வடகொரியாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி எட்வின் சால்வடோர் தெரிவித்துள்ளார்.
2.5 கோடி மக்கள் தொகையுள்ள அந்த நாட்டில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.