இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங்.
இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது இருப்பினும் பாதுகாப்புப் படையினரை மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர்.
பால்கனியின் மேலே யாரோ ஒரு தீபத்தை ஏற்றி வைத்தனர். உடனே மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தனர்.
பிரதமர் அலுவலகம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பி மாலத்தீவு சென்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 37.1ன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் கூறியதாக அபேவர்த்தன கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
இந்த நேரத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக்கு எதிரான முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரண முகக் கவசமே அணிந்திருந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் நடந்த போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லம் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து தலைமறைவான கோட்டாபய புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்று தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, இன்று காலை போராட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து பேரணியாக கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் சென்றனர். பிறகு போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். அப்போது போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகத்தை நடத்தினர்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.
இந்நிலையில், ரணில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்திருப்பது அவர் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை செயல்படுத்தியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள் கூடியிருக்கும் நிலையில், அங்கே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டது.
நாடுமுழுவதும், அவசர நிலையும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை தாங்கள் கைவிடப்போவதில்லை என்று காலிமுகத் திடலில் உள்ள போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அமைதியாக கூடிப் போராட்டம் நடத்தி வரும் மக்களின் தலைக்கு மேலே ராணுவ ஹெலிகாப்டரை பறக்கவிடுவது, இந்த ஆட்சிக்கு எதிரான அமைதியான போராட்டத்தை இவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது என்று பிபிசியிடம் கூறினார் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விராகா பெரீரா.