கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (5) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரதிபுரம் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மார்ட்டின் சில்வா காசுதன் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார். (24) வயதுடைய இவர் அண்மையில் திருமணமானவர் என அறியமுடிகின்றது.

தனது தொழிலின் நிமிர்த்தம் பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு அவரின் மாடுகளை பராமரிப்பதற்காக புளுட்டுமானோடை பகுதியில் இங்குள்ள வாடியில் உறங்கிக்கொண்டிருக்கும் போது வாந்தி மற்றும் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர், சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply