ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்போன் டவர்கள் இயங்காததால் செல்போனிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இருண்ட கடைகளுக்குள் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலைத்தொடர்புகளும் பாதிப்புக்குள்ளாகின. மேலும், விமானச் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மாட்ரிட் மற்றும் லிஸ்பனின் மெட்ரோ அமைப்புகளில் பல பயணிகள் சிக்கித் தவித்தனர். நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளில் ரயில்கள் சிக்கிக்கொண்டன என்று யூரோநியூஸ் போர்ச்சுகல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரெட் எலக்ட்ரிகா, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த பெரிய மின்தடைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிரான்சில், மின் இணைப்பு வழங்கல் நிறுவனம் (RTE), ஒரு சிறிய தடை ஏற்பட்டதாகவும், ஆனால் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply