இந்தியாவுடன் அண்மையில் செய்து கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாடு, இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.
அந்த உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளியிடாமல், அரசாங்கம் மறைத்து வைத்திருக்கிறது. இப்போதைக்கு அது வெளியிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றன.
பிராந்திய அரசியல் சூழலில் ஏற்பட்டிருக்கின்ற திடீர் மாற்றங்கள், அரசாங்கத்திற்கான எதிர்பாராத நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது.
இந்த உடன்பாடு கடந்த மாத தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட போது, இருந்த சூழல் கடந்த வாரத்தில் இருந்திருக்கவில்லை.
கடந்த மாத தொடக்கத்தில் நிலைமை சுமூகமானதாக இருந்தது, பிராந்திய அரசியலில் கொந்தளிப்பு இருக்கவில்லை.
ஆனால், காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பெரும் போர் வெடிக்கக் கூடிய பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம்சாட்டுகிறது. அதனை அடிப்படையாக வைத்து பாகிஸ்தானுடன் உள்ள தொடர்புகள் பலவற்றை குறைக்கவும், நிறுத்தவும், இரத்து செய்யவும் இந்தியா முடிவு செய்திருக்கிறது.
அதேபோன்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள், தூதரகங்களில் இருந்தும் அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவிக்கின்றன.
சிந்து நதி ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக இந்தியா அறிவித்து பெரும் பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.
1965 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையை நிறுத்தி வைப்பதாக இந்தியா முதல் முறையாக அறிவித்திருக்கிறது.
பதிலுக்கு பாகிஸ்தானும், சிம்லா உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
மொத்தத்தில் இரண்டு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன.
இந்த தாக்குதலுக்குத் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம்சாட்டியே, அதன் மீது இந்தியா போர்க்கெடுபிடிகளை உருவாக்கியிருக்கிறது.
அதேபோல இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அல்லது உதவியவர்கள் எனக் கூறப்படுகின்றவர்களின் வீடுகளை இந்திய இராணுவத்தினர் குண்டு வைத்து தகர்க்கின்றனர்.
இது நடப்பது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் ஆகும். தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
அப்படியிருக்க, இந்த தாக்குதலை காரணமாக வைத்து பாகிஸ்தானின் மீது இந்தியா தாக்குதலை தொடுப்பது என்பது பிராந்திய ரீதியாக பதற்றத்தையும் போர்ச்சூழலையும் ஏற்படுத்தும்.
அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் உள்ளது.
இந்தச் சூழலில் இலங்கை அரசாங்கம் எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறது. ஏனென்றால், அண்மையில் தான் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அந்த உடன்படிக்கையின்படி, இலங்கையின் நிலப்பரப்பை மாத்திரமன்றி, கடற்பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு தரப்பும் பயன்படுத்த முடியாதபடி வாக்குறுதி பெறப்பட்டிருப்பதாக இந்தியா கூறியிருந்தது.
1971 இந்திய -பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் போர் விமானங்கள், கொழும்பில் எரிபொருளை நிரப்பிச் சென்ற வரலாறும் உள்ளது.
ஆனால், இப்பொழுது இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டுக்கு அமைய, போர்ச்சூழல் ஒன்றில், இலங்கையில் பாதுகாப்புத் தளபாடங்களை சேமித்து வைப்பதற்கான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துவதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
அப்படியான நிலை ஒன்று ஏற்படுமேயானால், பாகிஸ்தானுடன் இந்தியா போரில் இறங்குகின்ற போது- இலங்கையை அது தளமாக பயன்படுத்த எத்தனிக்கக் கூடும்.
பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அது சார்ந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், இலங்கையினால் அதற்கான கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாது.
ஒருவேளை, இந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்வதானாலும் கூட, உடனடியாக செய்ய முடியாது.
அதற்கு மூன்று மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.
இதனால் தான், இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தமானது, இலங்கையை தேவையற்ற பிராந்திய மோதலுக்குள் இழுத்துச் செல்லப் போகிறது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன.
இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் புரிகின்ற நிலை ஒன்று ஏற்பட்டால், இலங்கையும் அதன் இலக்காக மாறலாம் என்றும் சிலர் எச்சரிக்கின்றார்கள்.
ஏனென்றால், இலங்கையில் இந்தியா தளங்களைப் பேண முயன்றாலோ அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்த முயன்றாலோ, அது பாகிஸ்தானுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாக இருக்கும்.
ஆனால், இலங்கையுடன் பாகி ஸ்தான் நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர பாதுகாப்பு, இராஜதந்திர, பொருளாதார உறவுகள் காணப்படுகின்றன.
கடந்த 28ஆம் திகதியில் இருந்து, 30ஆம் திகதி வரை 5 ஆவது பாகிஸ்தான்- — இலங்கை பாதுகாப்புக் கலந்துரையாடல் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது.
அதில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
போர்ப்பதற்றங்களுக்கு மத்தியில் இவர்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரையும் சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இந்தியா அளித்த பங்களிப்புக்கு நிகராக, பாகிஸ்தானும் பங்களிப்பு வழங்கியது.
இராணுவத்துக்கு தேவையான போர்த் தளவாடங்களை பாகிஸ்தான் பெருமளவில் விநியோகித்தது.
வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கை ஒரு கட்டத்தில் ஆட்டிலறிகள், மோட்டார் குண்டுகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் இடைநிறுத்தப்படுகின்ற நிலை ஏற்பட்டது.
அப்போது, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுத்து வேண்டுகோளை அடுத்து பாகிஸ்தான் அரசாங்கம், தனது இராணுவ ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளை அனுப்பி வைத்தது.
இல்லாவிட்டால், இறுதிக்கட்டப் போர் நடவடிக்கை மாங்குளத்துடன் நின்று போயிருக்கும்.
இவ்வாறாக, இருநாடுகளுக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ள நிலையில், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பாதுகாப்பு உடன்பாட்டினால், பாகிஸ்தான் உடனடியாக இலங்கையை குறி வைக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையை, இந்தியா தளமாகப் பயன்படுத்துகின்ற சூழல் ஒன்று உருவானால், அது நிலைமையை சிக்கலாக்கக் கூடும்.
இந்திய- பாகிஸ்தான் போர் நெருக்கடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலை அநுரகுமார திசாநாயக்க உடனடியாகவே கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுபற்றி இந்தியப் பிரதமருக்கு கடிதமும் அனுப்பினார்.
மூன்று நாட்கள் கழித்து அவர் திடீரென இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருக்கிறார்.
15 நிமிடங்கள் இடம்பெற்ற அந்த உரையாடல் வெறுமனே துக்கம் விசாரிப்பதற்கோ அனுதாபம் தெரிவிப்பதற்கோ அல்லது கண்டனம் தெரிவிப்பதற்கோ இடம் பெற்றதல்ல.
இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான அந்த உரையாடலில், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களையும், பிராந்திய பதற்றத்தை தணிப்பது தொடர்பான விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுடன் இலங்கை இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கருத்து பாகிஸ்தானால் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பாகிஸ்தானுடன் இந்தியா முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்தியாவின் பக்கம் இலங்கை இருக்கிறது என்ற கருத்து, வெளிப்படையாகவே இலங்கையை இந்தியாவின் பக்கம் நிற்பதாகவே அர்த்தப்படுத்தும்.
இது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் விடயமாகும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தோன்றியுள்ள பதற்ற நிலை விவகாரத்தில், நாங்கள் நடுநிலையை வகிக்கிறோம் என வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
இந்த விடயத்தில் எந்தப் பக்கமும் சார்ந்து செயற்படவில்லை என்றும், அதனை உறுதிப்படுத்துவதாகவும் தெளிவாக கூறியிருக்கிறது.
இலங்கை நடுநிலையான கொள்கையை கொண்டிருக்கும் ஒரு நாடு என்றால், அது இரண்டு பக்கமும் சாராத கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
ஆனால், இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், அது அக்கொள்கையிலிருந்து விலகி விட்டதாக பரவலான கருத்து உருவாகியிருக்கிறது.
இப்படியிருக்க இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறது.
இதனால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுடன் மோதல் சூழலை தவிர்க்க வலியுறுத்தியிருக்கலாம்.
ஏனென்றால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறைந்தால்- போர்ச்சூழல் நீங்கினால் தான், இலங்கைக்கு நிம்மதி.
இல்லாவிட்டால் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலை தான் அரசாங்கத்துக்கு ஏற்படும்.
–சுபத்ரா