ராஜஸ்தானில் உயிரிழந்த தாயின் வெள்ளி வளையல்கள் உள்ளிட்டவற்றை மூத்த மகனிடம் ஒப்படைத்தநிலையில், ‘அது எனக்குதான் வேண்டும்’ என்று கூறி இளைய மகன் இறுதி சடங்கை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி – பேஹரோட் மாவட்டம், விராட்நகர் பகுதியில் வசித்து வந்தவர் பூரி தேவி வயது 80 . இவருக்கு திருமணமான நிலையில், ஆறு மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஐந்தாவது மகனின் பெயர் ஓம்பிரகாஷ். மற்ற ஐந்து மகன்களும் ஒன்றாக வாழ்ந்துவந்தநிலையில், ஓம்பிரகாஷ் மட்டும் கிராமத்திற்கு வெளியே தனித்து வாழ்வதாக கூறப்படுகிறது.

ஓம்பிரகாஷுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த மே 3 ஆம் தேதியன்று, பூரி தேவி முதுமைக்காரணமாக காலமானார்.

இதனையடுத்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடக்க தொடங்கின. ஓம்பிரகாஷ் உட்பட இரண்டு சகோதர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் தாயை சவப்பெட்டியினுள் வைக்க தோளில் சுமந்து சென்றனர்.

இந்தநிலையில்தான், பூரி தேவியை இறுதி காலத்தில் கவனித்துக்கொண்ட மூத்த மகன் கிரியிடம் பூரி தேவியின் வெள்ளி வளையல் உள்ளிட்ட நகைகள் ஒப்படைக்கப்பட்டன.

இதனை கவனித்த ஓம்பிரகாஷ், சுடுகாட்டிற்கு வந்தடைந்ததும், தாயின் வெள்ளி வளையல்களை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று சண்டை போட துவங்கியுள்ளார். இவரை பலர் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால், சமாதானம் ஆகாத ஓம்பிரகாஷ், ஒருகட்டத்தில் உடலை தகனம் செய்வதற்காக அடுக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள்மீது ஏறிக்கொண்டு படுத்துக்கொண்டார். ‘நகைகளை தரவில்லையெனில், என்னையும் சேர்த்து எரியூட்டுங்கள்’ என்று கூற ஆரம்பித்தார்.

இவரை சமாதானம் செய்ய முடியாதநிலையில், வீட்டிலிருந்து வெள்ளி வளையல்களை எடுத்துவந்து ஒம்பிரகாஷிடம் ஒப்படைத்தனர். இதன்பின்னரே, இறுதி சடங்கு நடத்த அனுமதித்தார் ஒம்பிரகாஷ். இதனால், இரண்டு மணி நேரம் இறுதி சடங்கு நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டநிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட பலர், ’மனிதாபிமானமற்ற செயல் இது’ என பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு ஓம்பிரகாஷனை திட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version