வீதியில் நித்திரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் இடம்பெற்றது. இளைஞன் மீது ஏற்றிய வாகனம் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியில் உள்ள தும்பாஞ்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

செங்கலடி பதுளை வீதியில் உள்ள கரடியனாறு தும்பாஞ்சோலை பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் உள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞர் உட்பட இருவர் திங்கட்கிழமை இரவு சென்று அங்கு வீதி ஓரத்தில் நித்திரை செய்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை 1.30 மணியளவில் வீதியோரத்தில் நித்திரை செய்த இளைஞன் மீது வீதியால் சென்ற வாகனம் ஏறிச் சென்றதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை கண்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதேவேளை இளைஞனுடன் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளதுடன் அவர் கண்விழித்த போது இளைஞனுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில் இருந்துள்ளதுடன் மதுபானம் அருந்திவிட்டு வீதியில் நித்திரை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது தலையில் வாகனத்தின் டயர் ஏறியதால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து இளைஞன் மீது வாகனத்தை ஏற்றி விட்டு தப்பி ஓடிய வாகனத்தை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version