“அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்ப கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் புதிதாக H-1B விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. “,