நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின், சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் லொறி சாரதி, ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் சிறுவர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்து நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, சிகிச்சை பலனின்றி லொறியில் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் இருவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.