ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தினேஷ் நிஷாந்த குமார  என்னும் “கம்பஹா பபா“ , வெளிநாட்டிலிருந்து கொண்டு தனது சகாக்கள் மூலம் நாட்டினுள் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கும் முக்கிய விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவினருடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் “கம்பஹா பபாவிடம்“  முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் களணி குற்றப் புலனாய்வுப் பிரிவு  கடந்த செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

நேபாளத்தில் மறைந்திருந்தபோது தினேஷ் நிஷாந்த குமார  என்னும் “கம்பஹா பபா“ ,   இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவினருடன் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு  நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தற்போது பேலியகொடை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, தற்போது  தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவரும்  பிரபள போதைப்பொருள் கடத்தல் காரருமான மனுதின பத்மசிரி பெரேரா என்னும் “கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனைக்கமைய  நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மனித படுகொலைகள் போன்ற பல  குற்றச்செயல்களுக்கு தேவையான துப்பாக்கிகளை விநியோகித்தவர் “கம்பஹா பபா“ என தெரியவந்துள்ளது. மேலும் “கம்பஹா பபாவின்“  நேரடி வழிகாட்டலின் கீழ் பல குற்றச்செயல்கள் அங்கேரியுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகளையும்,  சட்டவிரோதமான முறையில் மூலம் பணம் ஈட்டும் கும்பலை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பையும் செயற்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் வெளிநாடு சென்று  தலைமறைவாகியுள்ள  ஏனைய பாதாள உலகக்குழு தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தாரா ? என்பது குறித்து விரிவான  விசாரணை முன்னெடுத்து உள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.

ஒரு சில அரச சாரா நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி, நாட்டில் பொது ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார். அதேவேளை “கெஹல்பத்தர பத்மே” மற்றும் “கம்பஹா பபா” ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நாட்டில் நடந்த பல கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள துப்பாக்கிகளைக் கண்டுபிடிக்க சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், சந்தேக நபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலனை செய்த மேலதிக நீதிவான் நுவன் கௌசல்ய,  விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், கோரப்பட்ட தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version