தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிரி நாட்டின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஆதரவு ஊடகங்கள் அறிவித்துள்ளது.

இதற்கான ஆதாரமாக ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எப்-15 ரக போர் விமானங்களை வீழ்த்தவே முடியாது என அமெரிக்கா கூறி வந்த நிலையில், இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் போர் சூழ்நிலை உலக நாடுகளிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தாக்குதல்களின் காரணமாக பல முக்கிய ராணுவ மற்றும் தொழில்துறை மையங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போரின் போது ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி மையங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஈரான் போர்

இந்த தாக்குதல்களின் விளைவாக ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 18,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த தாக்குதல்களில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு ஆசியா போர்

அதேநேரத்தில், இஸ்ரேல் நாட்டிலும் பலர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் இந்த தாக்குதல்களின் தாக்கத்தை சந்தித்து வருகின்றன. சவூதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை

இந்த போரின் நேரடி தாக்கமாக, உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நீரிணை வழியாக ஆசிய நாடுகளுக்கு பெருமளவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், உலகளாவிய எண்ணெய் விலைகளிலும் தாக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எப்-15 ரக போர் விமானம்

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அதிநவீன எப்-35 போர் விமானத்தை தாக்கியதாகவும், அது அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் ஈரான் கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது ஹோர்மூஸ் நீரிணை அருகே எதிரி நாட்டின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Share.
Leave A Reply

Exit mobile version