-83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போட்டியிட்டன.
-83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.
-ஆயுத போராட்டம் மீதும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையை தோற்றுவித்தது.
– இதே வேளையில் ஜே.ஆர். அரசு புதிய அறிவிபொன்றை வெளியிட்டது.
அரசின் அறிவிப்பும் அடையாள எதிர்ப்பும் !
சத்தியப் பிரமனாம் : சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்தால் ஆயிரக்கணக்கான தமிழ் ஊழியர்கள் தமது வேலைகளை இழக்க வேண்டி ஏற்படும் அதனால் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே சத்தியப் பிரமாணம் எடுப்பதை தாம் எதிர்க்கப் போவதில்லை என்று புலிகளது சார்பாக பிரபாகரனது பெயரில் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.
சத்தியப் பிரமாணத்தை எதிர்க்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். முடிவு செய்தது.
இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் பத்மநாபா செய்த முடிவு அது.
சத்தியப் பிரமாணத்தை தடுக்க முடியாவிட்டாலும் அதற்கு அடையாள எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டும்.
வடக்கு – கிழக்கெங்கும் சத்தியப் பிரமாண படிவங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

கிழக்கின் முக்கியமான உறுப்பினர்கள் சிறையில் இருக்கிறார்கள். தற்போது அங்கே உள்ளவர்களால் நடடிக்கைகளில் இறங்க முடியுமா? என்று யாழ் பிராந்திய கமிட்டி பத்மநாபாவிடம் கேட்டது.
“முடியும்” என்று விட்டு இந்தியா சென்று விட்டார் பத்மநாபா.
சத்திய பிரமாணம் செய்யும் திகதி வந்தது. யாழ் குடாநாட்டில் ஆயுதங்களோடு அரசு அலுவகங்களில் புகுந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் மக்கள் விடுதலைப்படை (பி.எல்.ஏ.) சத்தியப் பிரமாணம் படிவங்களை பறித்தெடுத்தது.
பொலிஸ் ஜீப் மீது தாக்குதல்:
ஒரே நாளில் அரசு அலுவகங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏழு பேர் மட்டுமே பங்கு கொண்டனர் என்பதுதான் ஆச்சரியம்.
ஆரசுக்கு சொந்தமான ஜீப் வண்டிகள் மற்றும் வாகனங்கள் குண்டுவைத்தும் தீயிட்டும் கொளுத்தப்பட்டன.
யாழ் நகருக்குள் தனது ஜீப்பில் வந்து கடை ஒன்றுக்கு சென்றார் பொலிஸ் அதிகாரி. அவர் திரும்பி வந்து ஜீப்பில் ஏறிய போது “அசையாதே அப்படியே இரு” என்றனர் இளைஞர்கள்.
பொலிஸ் அதிகாரியை ஜீப்புக்குள் வைத்தே பெற்றோல் ஊற்றப்பட்டது. அவர் மன்றாடினார். கதவைத் திறந்துவிட அவர் தெருவில் தவழ்ந்து சென்றார்.
அவர் வந்த ஜீப் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது, இந்த நடவடிக்கைகளில் ரமேஷ், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன், இளங்கோ ஆகியோர் பங்கு கொண்டனர்.
அடையாள எதிர்ப்பு என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்த்தமை மட்டுமே ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு கிடைத்த வெற்றி. ஆனால், பத்மநாபா உறுதியளித்தபடி கிழக்கில் சத்தியப்பிராமண எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் நடைபெறவேயில்லை.
மட்டக்களப்பு சிறையடைப்பு :
83 ஜூலைக் கலவரத்தின் பின்னர் நடைபெற்ற மற்றொரு முக்கியமான சம்பவம் மட்டக்களப்பு சிறையடைப்பாகும்.
வெலிக்கடை சிறைப் படுகொலைக்கு பின்னர் முக்கியமான தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப் பட்டிருந்தனர்.
60 க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு தடுத்து வைகப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பில் வாவி சூழ்ந்த பகுதியான ஆணைப்பந்தி என்னுமிடத்தில் சிறைச்சாலை அமைந்திருந்தது.
சிறையை உடைத்து போராளிகளை மீட்க வேண்டும் என்று திட்டமிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தலைவர்களின் ஒருவராகவும், மக்கள் விடுதலை படை தளபதியாகவும் அப்போதிருந்த தேவானந்தா, மட்டக்களப்பு பிராந்திய தலைவராக இருந்த சிவா, மத்திய குழு உறுப்பினராக இருந்த மணி, மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுபினர்களான குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகியோர் உட்பட 15 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்.
மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் கால்மாக்ஸ் நூற்றாண்டு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஒரு கருத்தரங்கம் நடத்தியது.
அதில் ஒருவர் வரதராஜப்பெருமாள், இன்னொருவர் மகேஸ்வரராஜா.
கருத்தரங்கில் கலந்து கொள்ள முதலில் வரதன் மறுத்தார்.
யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பதால் கிடைக்கும் வருமானத்தை இழக்க முடியாது. ஏற்கனவே பட்ட அனுபவங்கள் போதும் என்று கூறினார்.
ரமேஷ், தயாபரன் ஆகியோர் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். கருத்தரங்கில் பொலிஸ் நுழைந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களோடு சேர்த்து இரண்டு விரிவுரையாளர்களையும் கைது செய்தது.
அவர்களும் மட்டக்களப்பு சிறையில் தான் இருந்தனர்.
அச்சமயத்தில் பத்மநாபாவும் கருத்தரங்கில் இருந்த போதும் அவர் தப்பிவிட்டார்.
புளொட் அமைப்பில் மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜா, வாமதேவன், பாரூக், டேவிட் ஐயா ஆகியோரும், ‘தமிழீழ விடுதலை இராணுவம்’ என்றும் அமைப்பைச் சேர்ந்த பனாகொடை மகேஸ்வரனும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த சிலரும், மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள்.
இவர்களில் பலரை தானாகவே முன்வந்து அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை.
சிறை உடைப்பு திட்டத்தை இவர்கள் அனைவரும் முன்னின்று வரவேற்றதற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.
சிறை உடைப்பு நடவடிக்கையை வெளியில் இருந்து மேற்கொள்ளும் பொறுப்பு குணசேகரனிடமும், சிறையின் உள்ளே டக்லஸ் தேவானந்தா விடமும் ஒப்படைக்கப்பட்டது.
புலிகள் மறுப்பு :
சிறை உடைப்பை மேற்கொள்ள புலிகளது உதவியையும் பெற ஈ.பி.ஆர்.எல்.எஃப். மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் விரும்பினார்.
மட்டக்களப்பு சிறையில், புலிகளது ஆதரவாளர்களான விரிவுரையாளர் நித்தியானந்தன், நிர்மலா, வணபிதா சிங்கராஜர் ஆகியோரும் சிறையில் இருந்தமையால் இரு அமைப்பும் இணைந்து நடவடிக்கையில் இறங்கலாம் என்று குணசேகரன் விரும்பினார்.
முதலில் ஒப்புதல் தெரிவித்த புலிகள் அமைப்பினர் பின்னர் மறுத்து விட்டனர்.
அதன் பின்பு ‘புளொட்’ அமைப்பின் தாளைவர்களில் ஒருவரான வாசுதேவாவுடன் பேசி இரு அமைப்பினரும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை பகிர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டர்.
சிறையில் உள்ளே டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜன் ஆகியோர் நடவடிக்கைப் பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.
திட்டம் தயாரானது :
அரை மணிநேரத்திற்கு ஒரு தடவை இராணுவ ரோந்து இருக்கும். பொலிஸ் அடிக்கடி வந்து பாதுகாப்பைப் பார்வையிட்டுச் செல்லும்.
இவர்ருக்கிடையே தப்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் என்ற போர்வையிலும், வேறு சில உதவிகள் மூலமாகவும் சிறைக்குள் சில ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன.
சிறைகாவலர்களை மடக்கும் பொறுப்பை டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன் போன்றோர் எடுத்துக் கொண்டனர்.
வயதான கைதிகளான டேவிட் ஐயா போன்றோருக்கு மடக்கப்படும் சிறைக்காவலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஓட்டும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.
சிறைக்கதவு வழியாக தப்பிச் செல்ல முடியாவிட்டால் பின் சுவர் வழியாக செல்ல வேண்டும். அந்தச் சுவரை உடைத்து வழி ஏற்ப்படுத்தும் பொறுப்பு வரதரஜப்பெருமாளிடம் கொடுக்கப்பட்டது.
சந்தேகம் :
இடையில் ஒரு சந்தேகம் தமக்குத் தெரியாமல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் தப்பித்து சென்று விடுவார்களே என்று புளொட் உறுப்பினர்களுக்கு சந்தேகம்.
அதே சந்தேகம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கும்.
இதனால் இரவு நேரங்களில் இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கண்காணித்தனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதம் ஒன்றில் பனாகொடை மகேஸ்வரனை பரந்தன் ராஜன் அடித்து விட்டார்.
சிறை உடைப்புக்கு திட்டமிட்ட நாளும் வந்துவிட்டது.
செப்டம்பர் 23. 1983, இரவு 8 மணி சிறைக்காவலர் அந்தனிப்பிள்ளை என்பவர் கைதிகளுக்கு தேநீர் கொடுப்பதற்காக சினிமாப் பாடல் ஒன்றைப் பாடியபடி வந்தார்.
“என்ன தம்பிகளா எப்பட்யிருக்கிறீர்கள் ?” என்று குசி மூட்டில் வந்தவரை “அண்ணே வாங்கோ” என்று மடக்கிப் பிடித்தனர் போரளிகள்.
அவரது வாயில் ‘பிளாஸ்டர்’ ஒட்டப்பட்டது. அதனையடுத்து ஏனைய சிறைக் காவலர்களும் மடக்கப்பட்டனர். குறித்த நேரத்தில் சிறைக்கு வெளியே வாகனங்கள் வந்து சேர்ந்தன. தப்பிய போராளிகள் வாகனங்களில் ஏறிக் கொண்டனர்.
சிறையில் நிர்மலா :
இவர்கள் வெளியே வாகனத்தில் போய் ஏறியதை பின்புறக் சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதரஜப்பெருமாளும், அழகிரியும் அறியவில்லை.
இதே வேளை வணபிதா சிங்கராஜர் கோவை மகேசன், டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் தங்களால் தப்ப முடியாது என்று ஏற்க்கனவே கூறியிருந்தனர்.
தப்பிச் செல்வதால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்நோக்க அவர்களது உடல் நிலையும் ஒத்துழைக்காது என்பது முக்கிய காரணம்.
போராளிகள் தப்பிச் செல்லும் போது வணபிதா சிங்கராஜர் பிரார்த்தனையில் ஈடு பட்டார்.
நிர்மலா பெண்கள் பகுதியில் வைக்கபட்டிருன்தார். அவரது சிறைக் கூண்டைத் திறந்து மீட்கும் பொறுப்பு வாமதேவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வாமதேவன் தான் தப்பும் அவசரத்தில் நிர்மலாவை மறந்துவிட்டார்.
சுவரை உடைத்துக் கொண்டிருந்த வரதனுக்கும், அழகிரிக்கும் ஒரு சந்தேகம்; சிறையில் ‘எந்தச் சத்தத்தையுமே காணவில்லையே’ இருவரும் ஓடிவந்து பார்த்தனர்.
சிறையிலிருந்து தப்பியவர்கள் அனைவருமே போயே விட்டார்கள்.
இருவரும் திகைத்துப்போனார்கள். (தொடரும்)
கலைஞரும் டெலோவும், எம்.ஜி.ஆரும் புளொட்டும் கூட்டணி!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:22)