இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிலானோ நகரில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது இது ஒரு கொலையா? என்பது தொடர்பாக இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஷெஹான் பெர்னாண்டோ இத்தாலி பொலிஸ் அதிகாரிகளிடையேயும், அந்நாட்டு மக்களிடையேயும் மிகுந்த மதிப்பையும் கௌரவத்தையும் பெற்ற ஒரு அதிகாரியாவார். இத்தாலி பொலிஸ் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரேயொரு இலங்கையர் இவர் என்பதால், இவரது மரணச் செய்தி இத்தாலிய அதிகாரிகளுக்கும் அங்கு வாழும் இலங்கைச் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் இவரது பெற்றோரும் தமது மகனின் உயிரிழப்பால் கடும் அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் நாளை (27ஆம் திகதி) இத்தாலியின் மிலானோ நகரில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version