லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட ஒரு சிறு வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
அந்த தம்பதி நெருக்கமாக இருக்கும்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண்ணை கணவர் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ந்து மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் சிறு வாக்குவாதத்திற்காகப் பெண்ணை அவரது கணவரே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ராம்பூரில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், 33 வயதான அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது கணவனால் கொலை செய்யப்பட்டார்.
உடலுறவின்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக போலீசார் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி உயிரிழப்பு
கொலை செய்யப்பட்ட ஆசிரியை ஏக்தா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அங்குச் சிவ விஹார் காலணியில் உள்ள தனது வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக சிவில் லைன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏக்தாவின் உடல் படுக்கையில் கிடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொடூரம் நடந்துள்ளது.
அன்றைய தினம் காலையில் பால் விநியோகம் செய்பவர் ஏக்தாவின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார்.
இருப்பினும், யாரும் கதவைத் திறக்கவில்லை. நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு ஏக்தாவின் சடலத்தை கண்டெடுத்தனர்.
என்ன நடந்தது
ஏக்தாவின் சடலத்தை மீட்ட போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏக்தாவின் கணவரே ராகுல் சவுத்ரி இந்த கொலையைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.
மனைவியைக் கொலை செய்த பிறகு, ரூமை சாத்தாமல் அப்படியே அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்துள்ளது.
அங்கிருந்து மீரட்டில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
உடலுறவின் போது கொலை
விசாரணையின்போது, ராகுல் சவுத்ரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கணவன்- மனைவி நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது உடலுறவின்போது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் ஏக்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
கொலையைச் செய்த பிறகு, ராகுல் தனது ஐந்து வயது மகனை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தையைத் தனது இளைய சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவாக முயன்றார். இந்தச் சூழலில் தான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
உயிரிழந்த ஏக்தாவின் குடும்பத்தினர் ராகுல் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ராகுல் மதுவுக்கு அடிமையானவர் என்றும், வரதட்சணை கேட்டு ஏக்தாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் ஏற்கனவே கடந்த காலங்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், ராகுல் மற்றும் தலைமறைவாக உள்ள அவருடைய சகோதரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராகுல் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

