ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்ற நிலையை தணிக்க, அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக ஈரான் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் பின்னர், சுமார் 6 வாரங்கள் பதற்றம் நீடித்தது. இதன் பின்னர் ஏப்ரல் 7ஆம் திகதி 2 வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் நிலைமை ஓரளவு தணிந்தது.

இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

அமைதி பேச்சுவார்த்தைக்காக, ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf ) தலைமையிலான குழு, ஈரானின் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi ), ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அஹ்மதியான் (Ali Akbar Ahmadian) , மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நேசர் ஹெம்மாட்டி ( Abdolnaser Hemmati ) உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பாகிஸ்தானுக்கு சென்றது.

அதேவேளை, அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (J. D. Vance ) தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானை வந்தடைந்தது. 6 வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக கருதப்பட்டது.

ஆனால், இஸ்லாமபாத் நகரில் உள்ள செரீனா ஹோட்டலில் சுமார் 21 மணிநேரம் நீடித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக ஜே.டி. வான்ஸ் தெரிவித்துவிட்டு தனது குழுவுடன் நாடு திரும்பினார்.

இதனால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டுள்ளன.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதற்காக இரு தரப்பினரும் மீண்டும் இஸ்லாமபாத் நகருக்கு திங்கட்கிழமை வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் மேற்காசியாவில் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.

இதற்கிடையில், கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமது அல் தானி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து, மேற்காசிய பதற்றம் குறைவதற்கான சர்வதேச முயற்சிகள் மற்றும் தீர்வுக்கான விசயங்களை மேம்படுத்துவது பற்றி விவாதித்தனர்.

ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்பை பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

நிறுத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version