ஹோர்முஸ் நீரிணையை இன்று சனிக்கிழமை (18) முதல் மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஹோர்முஸ் நீரிணையானது மீண்டும் அதன் பழைய “கடுமையான மேலாண்மை” நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்தப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதே இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பக்கர் கலிபாப் ஏற்கனவே இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். “அமெரிக்கா எங்கள் துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டால், ஹோர்முஸ் நீரிணை இனி திறந்திருக்காது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதான கப்பல் போக்குவரத்து பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதுடன் இனி இந்தப் பாதை வழியாகக் கப்பல்கள் பயணிக்க வேண்டுமானால் ஈரானின் நேரடி அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகமான ‘IRIB’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்து அமெரிக்கா வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஈரான் நோக்கி வரும் மற்றும் ஈரானில் இருந்து வெளியேறும் எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் வழியாகப் பயணிக்க அனுமதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதற்குப் பதிலடியாகவே ஈரான் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான இந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

