உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சனிக்கிழமை அன்று நீரிணைக்கு அருகில் சென்ற ஒரு எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,

பாரசீக வளைகுடா அல்லது ஓமன் கடலில் உள்ள எந்தவொரு கப்பலும் தனது நங்கூரத்தை விட்டு நகரக்கூடாது.

நீரிணையை நெருங்கும் எந்தவொரு கப்பலும் “எதிரிக்கு ஒத்துழைப்பதாக” கருதப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகும்.

நீரிணையை த் தற்காலிகமாகத் திறப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்த அடுத்த நாளே இந்த தீர்மானத்தை ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை விலக்காததே இதற்குக் காரணம் என ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

“நீர் வழி பாதையை வைத்து ஈரான் எங்களை அச்சுறுத்தல் செய்ய முடியாது. ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை எங்களின் முற்றுகை தொடரும்.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் இதுவரை 23 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது நடைமுறையில் உள்ள இரு வார கால போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த மோதலில் இந்தியக் கொடியுடன் சென்ற இரண்டு கப்பல்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு ஈரானிய தூதுவரை அழைத்து தனது கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.

உலகில் உற்பத்தியாகும் மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த மோதலால் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் மேல் அதிகரித்துள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த போர் மூண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் போன்ற நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்து வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version