பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஹோர்முஸ் நீரிணை ஒரு தீவிரமான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு நெருக்கடியின் மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும்  இஸ்ரேலும்  நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த குறுகிய நீர்வழியில் ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நீரிணையை திறப்பதற்கு முன்வந்த ஈரான் அதன் துறைமுகங்களை தொடர்ந்தும் முற்றுகையில் வைத்திருக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் மூடிவிட்டது.

ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மீதும்  அங்கிருந்து வரும் கப்பல்கள் மீதும்  ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமடைந்தது. ஏப்ரில் நிலைவரத்தின் பிரகாரம்,   போர்நிறுத்தம் சில கப்பல்களை மட்டும் செல்ல அனுமதித்திருக்கிறது.

இருப்பினும், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் அமெரிக்க முற்றுகை காரணமாக பெரும்பாலான எண்ணெய்க் கப்பல்கள்  இந்தப் பாதையைத் தவிர்க்கின்றன. இதனால், ஒரு நாளைக்கு சுமார் 130 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து, தற்போது சில நாட்களில் வெறும் ஒற்றை இலக்க எண்ணிக்கையாகக் குறைந்துள்ளது.

கடல்சார் நெரிசல் புள்ளி  என்றால் என்ன?

கடல்சார் நெரிசல் புள்ளி அல்லது குறுகிய வழி (Chokepoint) என்பது உலகளாவிய வர்த்தகத்தின் பெரும்பகுதி கடந்து செல்லும் ஒரு குறுகிய கடல் பகுதியாகும். இதற்கு எளிதான மாற்றுப் பாதைகள் கிடையாது. இவை கடற்கரைகள், தீவுகள் அல்லது குறுகிய கால்வாய்களால் உருவான இயற்கையான புவியியல் தடைகள் ஆகும். கப்பல்கள்

எளிதாக பாதையை மாற்ற முடியாததால், இவை உலகளாவிய வர்த்தக அமைப்பில் முக்கியமான முனையங்களாக மாறுகின்றன.

இன்று உலகின் 70 முதல் 80 சதவீத எண்ணெய் கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது, மேலும் அதில் பெரும் பகுதி இத்தகைய நெரிசல் புள்ளிகள்  வழியாகவே செல்கிறது. இங்கு நடக்கும் ஒரு சிறிய விபத்து கூட உடனடியாக போக்குவரத்தைப் பாதிக்கும். இதன் விளைவுகள் மிகத் தீவிரமானவை. எரிசக்தி விலைகள் கடுமையாக உயரும், கப்பல் கட்டணம் அதிகரிக்கும் மற்றும் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படும். இது அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்து, பணவீக்கத்தை உண்டாக்கி பொருளாதார வளர்ச்சியை முடக்கும்.

ஹோர்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் நெரிசல் புள்ளியாகக்  கருதப்படுகிறது. இது பாரசீக வளைகுடாவை ஓமான் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இப்பகுதியில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு இதுவே முதன்மையான ஏற்றுமதிப் பாதையாகும்.

இதன் குறுகிய பகுதி வெறும் 21 கடல் மைல்கள் (38 கி.மீ) அகலம் கொண்டது. சாதாரண சூழலில், உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு — அதாவது நாளொன்றுக்கு சுமார் 21 மில்லியன் பீப்பாய்  எண்ணெய் — இதன் வழியாகச் செல்கிறது.

மசகு எண்ணெய் தவிர, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்  இருந்து வரும் திரவ இயற்கை எரிவாயுவும் (LNG) இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

இந்த எரிசக்தி விநியோகத்தில் சுமார் 80 சதவீதம்  ஆசியாவிற்குச் செல்வதால், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்தப் பாதையை பெரிதும் நம்பியிருக்கின்றன.

உலகின் பிற முக்கிய நெரிசல் புள்ளிகள்  எவை?

ஹோர்முஸ் தவிர, உலக வர்த்தக கட்டமைப்பு  மேலும் சில முக்கியமான இடங்களைச் சார்ந்துள்ளது. மலாக்கா நீரிணை (Strait of Malacca) மலாய் தீபகற்பத்திற்கும் இந்தோனேசியாவின் சுஊமத்ரா தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது இந்தியப் பெருங்கடலுக்கும் தென் சீனக் கடலுக்கும் இடையிலான குறுகிய கடல் வழியாகும்.

பாப் எல்-மண்டேப் நீரிணை (Bab el-Mandeb Strait) அரேபிய தீபகற்பத்திற்கும் ஆபிரிக்காவின் கொம்பு (Horn of Africa) பகுதிக்கும் இடையில் உள்ளது. இது செங்கடலின் தெற்கு நுழைவாயிலாகச் செயல்படுகிறது.

சூயஸ் கால்வாய் (Suez Canal)  எகிப்து வழியாகச் செல்லும் ஒரு செயற்கை நீர்வழிப்பாதையாகும், இது செங்கடலை மத்தியதரைக் கடலுடன் இணைக்கிறது. இது ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும் நீண்ட பயணத்தைத் தவிர்க்க உதவுகிறது.

பனாமா கால்வாய் (Panama Canal)  அட்லாண்டிக் மற்றும் பசுபிக் சமுத்திரத்தை  இணைக்கிறது. இது ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகத்திற்கு மிக முக்கியமான பாதையாகும்.

இந்த நீர்வழிகளுக்கு சர்வதேச சட்டம் எவ்வாறு பொருந்தும்?

சர்வதேச நெரிசல் புள்ளிகள்  வழியாக கப்பல்களின் போக்குவரத்து  பிரதானமாக ஐ.நா. கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் (UNCLOS) கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் விதிகளின் பிரகாரம்  சர்வதேச போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகள் “போக்குவரத்து அனுமதி” (transit passage) கொள்கைக்கு உட்பட்டவை.

இது அனைத்து நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் தடையின்றி தொடர்ந்து செல்ல அனுமதிக்கிறது. இருப்பினும், நீரிணையை ஒட்டியுள்ள நாடுகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தலாம்,

ஆனால் அவை கப்பல்களை நிறுத்தவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவோ முடியாது. இந்த உரிமை சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இதன் அமுலாக்கம் நாடுகளின் கடற்படை வலிமை மற்றும் ஒருங்கிணைப்பைப் பொறுத்தே அமைகிறது.

 

மேலும் வாசிக்க icon

Share.
Leave A Reply