கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருந்தொகையான வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற கும்பலைச் சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இன்று அதிகாலை 12:55 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் (EM-654) விமானம் மூலம் வருகை தந்த பயணிகள் குழுவொன்று, தங்களது பயணப் பொதிகளில் சிகரெட்டுகளை மறைத்து வைத்து பசுமை நடைபாதை (Green Channel) ஊடாக வெளியேற முயன்றுள்ளனர். இதன்போது கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
தங்கள் கூட்டாளி பிடிபட்டதைக் கண்ட ஏனைய பயணிகள், தங்களது 14 பயணப் பொதிகளை அங்கேயே கைவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 16 பொதிகளைச் சோதனையிட்டபோது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,29,800 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் 113 இலத்திரனியல் சிகரெட்டுகள் (E-cigarettes) கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 3 கோடியே 86 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடிய ஏனைய கடத்தல்காரர்களைக் கண்டறியச் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

