இலங்கை நிதி அமைச்சின் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகளால் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும் ‘அமைதிக்கான நடைபயணத்தின்’ மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (25.04.2026) கண்டியில் ஆரம்பமான நிலையில், அதில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்விடயத்தை உறுதிப்படுத்தினார். இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிய சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் பிரதமர் இதன்போது கருத்துத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படுவதை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலடி கொடுக்க அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான எதிர்க்கட்சி இருப்பது அவசியம் என்றாலும், தற்போதைய எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்படுகின்றனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

