யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டுப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, பல வணிக நிறுவனங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது. நெல்லியடி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ம.பிரபாகரனால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து, நேற்று (24.04.2026) மூன்று கடைகளின் முகாமையாளர்களுக்கு மொத்தம் 30,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
சோதனையின் போது, உணவகம் மற்றும் வெதுப்பகங்களில் உணவைக் கையாள்பவர்கள் முகச்சவரம் செய்யாமை, முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணியாமை, அசுத்தமான தரையில் உணவுகளை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன. மேலும், ஒரு பலசரக்கு கடையில் எலி எச்சங்கள் காணப்பட்டதோடு, அசுத்தமான சூழலில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நிறுவனத்தின் முகாமையாளருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேவேளை, மற்றொரு பலசரக்கு கடைக்கு எதிரான வழக்கு, அதன் முகாமையாளர் மன்றில் முன்னிலையாகாத காரணத்தால் ஜூன் 04-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

