உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் அவைத் தலைவருமான மதுசூதனன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஆனாலும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது பங்கேற்று வந்தார். கடந்த ஜூலை 18 ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல்காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில், மதுசூதனன் காலமானதாக பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
யார் இந்த மதுசூதனன்?
அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் அங்கம் வகித்த மதுசூதனன், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ;;சட்டப்பேரவை தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த காலகட்டத்தில் கைத்தறித் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். வட சென்னையில்பிரபல அரசியல்வாதியாக உருவெடுத்து, எதிர்கட்சிகளுக்கு சவால் விடுக்கக் கூடியவராக விளங்கினார் மதுசூதனன்.
ஒரு காலத்தில் தனது அதிரடியான செயல்பாடுகளால் எதிர்கட்சி பிரமுகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் வலம் வந்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.கவின் அவைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தவர், பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் திரும்பினார்.அதன் மூலம் ஓ.பி.எஸ் பக்கம் சென்ற முதல் மூத்த நிர்வாகியாகவும் அவர் பார்க்கப்பட்டவர்.
அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்ற காலகட்டத்தில் கட்சியின் பெயர், இரட்டை இலை ஆகியவற்றை மதுசூதனனிடமே தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது.
அண்மையில் மதுசூதனை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் ஒரேநேரத்தில் அப்போலோ சென்றது விவாதப் பொருளாக மாறியது.
அ.தி.மு.கவில் அதிகாரம்மிகுந்த பதவியாகப் பார்க்கப்படும் அவைத் தலைவர் பதவியில் 15 ஆண்டுகளாக மதுசூதனன் பதவி வகித்தார். அவரது மறைவால் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க தொண்டர்களும் சோகம் அடைந்துள்ளனர்.