ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை ‘இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்’ என்று தலீபான்கள் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போர் தீவிரமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலீபான்கள், தங்களது போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.
அதன் பின்னர் ஆட்சி மாற்றம் தொடர்பாக முந்தைய அரசின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
கடந்த காலத்தில் தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல் பெண்கள் தங்களது உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும்,
ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும், சினிமா மற்றும் ஆடல் பாடல்களுக்கு தடை, சிறிய குற்றங்களுக்கும் பொது வெளியில் கொடூரமான தண்டனை போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்திருந்தனர்.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் பணிகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்காக கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து தலீபான் அரசியல் தலைவர்கள் பலரும் காபூல் திரும்பியுள்ளனர். அவர்களில் நாடுகடத்தப்பட்ட தலைவர்கள் பலரும் அடங்குவர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தலிபான்கள் மாற்றியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்ற பெயரில் தான் தலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர்.
அந்நாட்டின் 102வது சுதந்திரதினமான இன்று நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்று பெயர் மாற்றப்பட்ட சின்னத்தை தலீபான் மூத்த தலைவர் ஜபியுல்லா முஜாஹித் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக செப்டம்பர் 2001இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்க படைகள் ஆட்சியை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் என்று பெயரை மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.