அக்கா, தங்கையான 15 மற்றும் 12 வயதான சிறுமிகள் இருவரையும் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார், என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவ்விரு சிறுமிகளின் சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரதிவாதியான சிறிய தந்தையின் மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளும் எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமின்றி நிரூபணமாகியது அதனையடுத்தே அச்சிறிய
தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் இலக்கம் 2 மேல் நீதிமன்றத்தின் முன்னோடி நீதிபதியான பேராசிரியர் சுமுது பிரேமசந்திர, பிரதிவாதிக்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்தார்.
பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த ஆறு அதிக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் மேல்
நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து அதிக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அவர், இனங்காணப்பட்டார். இதனையடுத்து 25 வருடங்களின் பின்னர், அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு அதிக்குற்றச்சாட்டுக்கு 15 வருடங்கள் என்றடிப்படையில், ஆறு அதிக்குற்றச்சாட்டுகளுக்கும் 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்த நீதிபதி,
தண்டத்தை ஒரே தடவையில் செலுத்தவேண்டுமென உத்தரவிட்டார்.
ஒரு அதிக்குற்றச்சாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்றடிப்படையில், ஆறு அதிக்
குற்றச்சாட்டுகளுக்கும் 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதனை செலுத்த தவறின், மேலும் ஒரு வருடம் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மனுதாரர்களான சிறுமிகள் இருவருக்கும் 10 இலட்சம் ரூபாய்
நட்டஈடு செலுத்துமாறும், அந்த நட்டஈட்டை செலுத்த தவறின் மேலும் இரண்டு வருடங்கள்
சிறைத்தண்டனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிரதிவாதி, சமூகத்திலிருந்து நீதிமன்றத்துக்கு வந்திருந்தமையால், 14 நாள்கள்
தனிமைப்படுத்தி, சிறைக்கு அனுப்புமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகாரிக்கு
நீதிபதி கட்டளையிட்டார்.
கல்கிரியாகம பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது, அந்நபருக்கு 36 வயதாகும். வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்ட இந்நாளில் அவர் 61 வயதை கடந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் ஒருசிறுமி,
சட்டக்கல்லூரிக்குச் சென்று சட்டம் கற்றுள்ளார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு
கொண்டுவரப்பட்டது.