வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முற்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து புளியங்குளம் பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முற்சக்கரவண்டி மீதே யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரக பிக்கப் வாகனம் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது முற்சக்கரவண்டியில் பயணித்த வவுனியா, கூமாங்குழத்தைச் சோந்த  சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையான சிவகுமார்   பிரவிந்தன் பலியானதுடன் இக் குழந்தையின் தாய் சிவகுமார் தவமலர் (வயது 30), தந்தை சுப்பையா சிவகுமார் (வயது 34) மற்றும் சகோதரி சிவகுமார் துவாராகா (வயது 5) ஆகியோர்  காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
முற்சக்கரவண்டி அது செல்லும் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அவ் வேளையில் எதிர் திசையில் இருந்து வந்த சொகுசு வாகனமொன்று வீதியை கடந்து கொண்டிருந்த மாடொன்றின் மீது மோதியதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து முற்சக்கரவண்டியின் மீது மோதியது.
இதன் போது முற்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் கிடங்கொண்றினுள் வீசப்பட, சொகுசு வாகனமும் முற்சக்கரவண்டியை தள்ளியவாறு சென்றது.
இதனையடுத்து அயலவர்கள் ஓடிச் சென்று முற்சக்கரவண்டியில் அகப்பட்டவர்களை காப்பாற்றிய போதிலும் குழந்தை அவ்விடத்திலேயே பலியாகி இருந்தது.
 accident
இதனையடுத்து ஏனையோரையும் புளியங்குளம் வைத்திசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர்களை கொண்டு சென்றனர்.
இந் நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் சொகுசு வாகனத்தை ஓட்டி சென்றவரின் பாதணிகளை வாகனத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து காரொன்றில் ஏற்றி எங்கோ உடனடியாக அனுப்பியிருந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இவ் விபத்து தொடர்பில் எடுத்துக்கூறிய போதிலும் பொலிஸார் அதில் அக்கறை செலுத்தாமல் சொகுசு வாகனத்தில் பயணித்தவர்களை கவனிப்பதிலேயே ஈடுபட்டிருந்தனர்.
அதன் பின்னர் சொகுசு வாகனத்தில் வந்தவர்கைளயும் அழைத்து சென்று விட்டனர். வாகத்தில் வந்தவர்கள் மது போதையில் இருந்தனர்.
ஆனால் சம்பவத்தில் பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் கரிசனை கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
இந் நிலையில் புளியங்குளம் பொலிஸாரிடம் சாரதி தொடர்பில் கேட்ட போது, வாகனத்தை செலுத்தி வந்தவர் யார் என்பது தெரியாது எனவும் சாரதி தப்பிவிட்டார் எனவும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்
-கரிகாலன்-

 

Share.
Leave A Reply

Exit mobile version