பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை வழிபாடு இன்றைய தினம் இடம்பெற்றது.

கடந்த 25 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில், குறித்த ஆலயம் காணப்படுகின்றது.

11391097_1138186932873537_2643237009051508810_nஇந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு  நடாத்த அனுமதி பெற்று தருமாறு அப் பகுதி மக்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து விக்னேஸ்வரனால் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி பெற்று தருமாறு கடந்த 25ம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இன்றைய தினம் ஞான வைரவர் ஆலயத்திற்கு பொங்கல் பொங்கி வழிபாடு நடாத்துவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இராணுவத்தினரின் அனுமதி கிடைக்கபெற்றதை அடுத்து இன்றைய தினம் ஆலயத்திற்கு செல்ல வந்த பக்தர்கள் வசாவிளான் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லையில் இராணுவத்தினாரால் பதிவுகள் மேற்கொள்ளபட்டு உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பக்தர்கள் கைதொலைபேசி மற்றும் புகைப்பட கருவிகள் என்பவற்றை எடுத்து செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.

இதேவேளை ஆலயத்திற்கு செல்வதற்காக சென்ற ஊடகவியலாளர்களையும் கைதொலைபேசி மற்றும் புகைப்பட கருவிகள் கையளித்து விட்டு செல்லுமாறு இராணுவத்தினர் கோரினார்கள்.


எனினும் அவற்றை கையளிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் மறுத்தனர். மேலிடத்து உத்தரவு கிடைத்தாலே கைதொலைபேசி மற்றும் புகைப்பட கருவிகளுடன் உட்செல்ல அனுமதிப்போம் என கூறி ஊடகவியலாளர்களை ஒரு மணி நேரம் உயர் பாதுகாப்பு வலய எல்லையில் தடுத்து வைத்து இருந்தனர்.

பின்னர் மேலிடத்து உத்தரவு கிடைக்க பெற்றதை அடுத்து ஊடகவியலளார்கள் மாத்திரம் கைதொலைபேசி மற்றும் புகைப்பட கருவிகள் கொண்டு செல்லலாம் என கூறி உட்செல்ல அனுமதித்தனர்.

25 வருடங்களுக்கு பின்னர் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஞான வைரவருக்கு பொங்கி வழிபட்டனர். இன்றைய தினம் இடம்பெற்ற பொங்கல் வழிப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலி. வடக்கு தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் வலி. வடக்கு உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 5ம் திகதி குறித்த ஆலயத்திற்கு செல்வதற்கு வசாவிளான் உயர் பாதுக்காப்பு வலய எல்லையில் உள்ள இராணுவ காவலரணில் மக்கள் அனுமதி கோரிய போது இராணுவத்தினர் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

அதனால் ஞாவைரவருக்கு உடைக்க என கொண்டு சென்று இருந்த தேங்காயினை இராணுவ காவலரண் முன்பாக உடைத்து அங்கேயே கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version