டெல்லி: இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார்.

ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300 கடன் கேட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய உமேஷ், பணம் கொடுத்தார்.

கடையில் பொருள் வாங்கிய அப்பெண், மீண்டும் ஆட்டோவில் ஏறி தனது வீட்டுக்கு வந்தடைந்தார். மேலும், பணத்தை வாங்கிச் செல்ல தனது பிளாட்டுக்கு வருமாறு உமேஷை அழைத்துள்ளார். உமேஷும் வேறு வழியில்லாமல், பிளாட்டுக்கு சென்றார்.

வீட்டுக்குள் சென்றதும், திடீரென அப்பெண் அறைக்கதவை பூட்டிவிட்டார். வீட்டுக்குள் ஏற்கனவே, அவரது தோழியும் இருந்துள்ளார். இரு பெண்களுமாக சேர்ந்து உமேஷை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவரது ஆடையை கிழித்து நிர்வாணமாக்க முயன்றுள்ளனர். முத்தமிட்டுக் கொண்டே அவரை கீழே போட்டு அமுக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த உமேஷ் எப்படியோ அவர்களை பிடித்து தள்ளிவிட்டு, வீடு இருந்த முதலாவது மாடியில் இருந்து வெளியே குதித்துள்ளார்.

இதனால் அவரது கால்கள் இரண்டிலும், எலும்பு முறிவு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உதவியோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் உமேஷ். இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version