சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு அவரது நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ராவுத்தர் இருந்தார். கடைசியாக இவர், “புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்” என்ற படத்தை தயாரித்தார்.
அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். “நண்பா நீ எழுந்து வருவாய்” என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ராவுத்தர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
படங்கள்: தி.குமரகுருபரன்