கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா… நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள் தான். உன்னுடன் தான் வாழ வேண்டும் அவள்’ என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு. இஃது களவியல் என்றால்… தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.
காதலை அஃதாவது கற்பியலை. “யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம்.
செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.
இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.
இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி’ வந்த கதை சுவாரஸ்யமானது.
திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்… பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.
பனைமரத்துக்கு “தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.
பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்… பவுன் கட்டித் தொங்க விட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.
“இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே… இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால் தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள். ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன…. ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன் தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. முதலில் காசி யாத்திரை.சந்நியாசம் வாங்க வேண்டுமென்றால்… மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை’ என்றொரு சடங்கு.
அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா’ (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3. ஊஞ்சலாட்டுதல் குழந்தாய்… நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.
4. மாலை மாற்றுவது:இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போது தான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க… பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு… முழுக்க நனைந்த அவளை… உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.
அவளது நனைந்த புடைவையை களைந்து விட்டு… புதுப் புடைவையை மணமகன் உடுத்தி விடும் போது… இந்த சேலை வளர்வது போல் நம்முடைய மகிழ்ச்சி.
சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு. இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்… அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம். –
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
(தொடரும்)
தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல். (இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 6)
இவற்றையும் படியுங்கள்
பஞ்சாங்கம் பார்த்தா உடலுறவு?
முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?
குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள் நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும்.
முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.
முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி, காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக்காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது.
புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம் படுகிராக்கியாகிவிடும்.
ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது.
இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே ‘அத்தாரிட்டி’ கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில் தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.
பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது.
ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன?
முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?
கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்?
உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்? மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.
ஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும்.
இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.
குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள் நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும்.
அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்? உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே!
இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை.
வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா?
கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.
ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா?
முகூர்த்த நேரத்தை மீறுகிறானா? அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.
பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.
இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா!
பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன? பாலியல் உறவு கொள்கின்றன?
பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும்? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளாபிறக்கும்?