வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒருவராக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
அவரது அண்மைய அறிக்கைகள், கருத்துகளில் ஏற்பட்டுள்ள தளம்பல் அல்லது குழப்ப நிலை, பல்வேறு தரப்பினரும் அவரை வைத்து அரசியல் செய்யும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை விளக்கி ஓர் அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டிருந்தால், அரசியல் சார்பற்றவர் என்ற நடுவுநிலையுடன் நின்று கொண்டிருக்க முடியும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
2015 பாராளுமன்றத் தேர்தலின் போது, வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று, அறிக்கை வெளியிட்டு குழப்பத்தை ஆரம்பித்து வைத்தது போல, இம்முறை நடந்து கொள்ளமாட்டார் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் வகையில், முதலமைச்சர் தரப்பில் இருந்து அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள், மீண்டும் தமிழரசுக் கட்சியுடன் மோதலுக்கு வித்திட்டுள்ளது.
அந்த நிலைப்பாடே இன்று, அவரை உதயசூரியனும், தன்னிச்சையாகவே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கிய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்திய முதலமைச்சர், கூட்டமைப்பு உடைந்து விடாது என்றும், அதனை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்துக்களை கூறி வந்தார்.
பின்னர் திடீரென, ஓர் ஊடகச் சந்திப்பில், எந்தக் கட்சி என்று பாராமல், ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலனில் அக்கறையுள்ள வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கோரியிருந்தார்.
அதற்குப் பிறகு அவர், அண்மைக்காலமாகவே தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் பாணியைப் பின்பற்றி வெளியிட்டு வரும் கேள்வி பதில் அறிக்கையில், தமிழரசுக் கட்சியையும், அதன் கொள்கையையும், கேள்விக்குட்படுத்தியும், அதன் தலைமையை விமர்சித்தும், ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த அறிக்கை, தமிழரசுக் கட்சி மீதான அவரது கோபம் தணியவில்லை என்பதை வெளிப்படுத்தியதுடன், குழப்பம் மிகுந்தவராகவும் அவரை அடையாளப்படுத்தியது.
அதைவிட, கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்படுவதாக ஒரு கேள்வியை தாமே எழுப்பி, அதற்கும் தாமே பதிலளிக்கும் வகையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக தமிழரசுக் கட்சி அத்தகைய எந்த விமர்சனங்களையும் அண்மைக்காலத்தில் முன்வைத்திராத போதிலும், இத்தகையதொரு வினாவை தாமே எழுப்பி அதற்குப் பதில் கொடுக்க முனைந்தமை, தமிழரசுக் கட்சியை வேண்டுமென்றே சீண்டுகின்ற ஒரு விடயமாகத் தான் தென்பட்டது.
அந்த அறிக்கையில், தமிழரசுக் கட்சி 2013 தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த கொள்கைகளில் இருந்து விலகி விட்டதாக சாடியிருந்தார் முதலமைச்சர்.
கட்சித் தலைமை சுயநலப் போக்குடன்,முடிவுகளை எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
தம்மைக் கட்சியின் கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை மாத்திரமன்றி, தாம் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத ஓர் அரசியலமைப்பு என்று தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்த சில விடயங்கள், அவரது குழப்பமான நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் அழைப்பு விடுத்ததால் தான், முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், முதலில் அவரை அரசியலுக்கு அழைத்தது இரா.சம்பந்தன் தான். அதற்குப் பின்னரே, ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அழைத்தனர்.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.
அவரும் சேர்ந்து வந்து அழைத்தால் தான், பொதுவேட்பாளராகப் போட்டியிடுவேன் என ஒற்றைக்காலில் நின்று அதனைச் சாதித்தவர் முதலமைச்சர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத ஓர் அரசியல் கூட்டமைப்பு என்பது தனக்கு அப்போது தெரியாது என்ற முதலமைச்சரின் கருத்து அபத்தம் நிறைந்தது.
உலக நடப்புகளை நன்றாக அறிந்து வைத்திருந்த- தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அனுபவத்தைக் கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி அல்ல என்று தெரியாமல் இருந்தது என்பது நம்ப முடியாத விடயம்.
கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி இல்லை என்பதால் தான், தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது கூடத் தெரியாமலா அவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியிருப்பார்?
முதலமைச்சரான பின்னர், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் இருதரப்புக்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்று வந்தன.
ஒரு கட்டத்தில் முதலமைச்சர் பொதுவேட்பாளராகவே போட்டியிட்டார்,
எல்லாக் கட்சிகளையும் அவர் சமமாகவே நடத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கூறிய போது, தாம் முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளவில்லை என்றும், தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே தான் தெரிவு செய்யப்பட்டேன் என்றும் கூறியவர்.
ஆனால் பின்னர் தமிழரசுக் கட்சியுடன் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன் அவருக்கு நெருக்கம் அதிகமானது.
அந்த நெருக்கத்தின் உச்சமாக, முதலமைச்சரை மாற்றுத் தலைமையாக உருவாக்க தமிழ் காங்கிரசுடன் இணைந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ். முயற்சித்தது.
எனினும், உள்ளூராட்சித் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனி அணியில் இணைந்து கொண்டமை, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தத் தவறவுமில்லை.
தமிழரசுக் கட்சியைச் சாடியும், தனது கொள்கை, தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையுடன் ஒத்துப் போவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்ட பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்செயலர் சிவசக்தி அனந்தன், மாகாணசபைத் தேர்தல் குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.
அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் மவை சேனாதிராசாவும், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் போட்டியிடுவார்கள் என்றும், புளொட் ,ரெலோ என்பன தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கடைசி தேர்தல் இது என்றும் அவர் கூறியிருந்தார்.
இது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது, அடுத்தடுத்த நாட்களில் அவர் வெளியிட்ட அறிக்கையே உணர்த்தி நிற்கிறது.
தன்னை வைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் அரசியல் நலன்களை அடைய முனைகிறார்கள் என்ற விசனத்தை அவர் இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா என்று தான் இன்னமும் தீர்மானிக்காத நிலையில், குறித்த ஒரு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது தவறானது என்று அவர் கூறியிருக்கிறார்.
தனது கொள்கை தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையுடன் ஒத்துப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையுடன் அது ஒத்துப்போகிறது என்பதையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட முனைந்ததும், உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து, தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்த முனைந்ததையும், கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளும், வேட்பாளர்களும் அவரை வைத்து பந்தயம் கட்ட வழிவகுத்துள்ளது.
அதனால் தான், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று தன்னிச்சையாகப் பிரசாரம் செய்யப்படும் நிலை ஒன்றும் உருவாகியிருக்கிறது.
போகிற போக்கில், ஐக்கிய தேசியக் கட்சியினரோ, அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ கூட தமது சின்னத்தில் தான் விக்னேஸ்வரன் போட்டியிடப் போகிறார் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்ற நிலை கூட உருவானது.
இந்த விபரீதத்தை உணர்ந்தே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது பெயரை இழுத்து சில கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் காலத்தில் நன்மை பெற முயற்சிக்கிறார்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தகையதொரு நிலை உருவாவதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னரே தவிர்த்திருக்கலாம். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தேர்தல் நெருங்கி வரும் ஒரு நாளில் ஒரே ஒரு அறிக்கையுடன் அவர் நிறுத்தியிருந்தால், இப்படியான குழப்பம் ஏற்பட்டிருக்காது.
முதலமைச்சரின் குழப்பம், இன்று கட்சிகளையும் தமிழ் மக்களையும் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. இது முதலமைச்சரின் நிலைப்பாடுகள் எந்தளவுக்கு உறுதியானது என்ற கேள்வியையும் எழுப்ப வைத்திருக்கிறது.
அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி பல்வேறு தரப்புகள் அரசியல் செய்ய முனைகின்ற சூழலில், தமிழ் மக்களின் உரிமைக்கான ஒன்றுபட்ட குரலின் வலு குறைவடையத் தொடங்கியிருக்கிறது.
2009 இல் போர் முடிவுக்கு வந்த போது, தமிழ்த் தேசிய அடையாளத்துடன் அரசியல் நடத்தும் ஒரு தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருந்தது.
ஆனால் இன்று அது மூன்று அணிகளாக மாறியிருக்கிறது. இது நான்காகவோ, ஐந்தாகவோ மாறினாலும் ஆச்சரியமில்லை.
இப்படியொரு நிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகள், கூட்டமைப்புத் தலைமை மற்றும் தமிழரசுக் கட்சியின் ஏகபோகத்தினால் மாத்திரம் உருவானது என்று கூற முடியாது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட இதற்கான ஒரு காரணியாக இப்போது மாறியிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் இப்போது அவர் விரும்பியோ விரும்பாமலோ அவரை வைத்து அரசியல் செய்ய தமிழரசுக் கட்சி அல்லாத தரப்புகள் முடிவு செய்து விட்டன.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னமும் ஐந்து வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதோ, அவரை அவ்வாறான அறிக்கைகளை வெளியிடத் தூண்டுவதோ, மக்களை இன்னும் குழப்பமான நிலைக்கே கொண்டு செல்லும்.
அத்தகையதொரு குழப்பத்தை தான் முதலமைச்சரும் விரும்புகிறாரா?
– காண்டீபன்-