புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் 49 வயது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சைக்காக புதுச்சேரி வந்த பிறகு, தனது மனைவிக்கு சிகிச்சை முழுமை பெற சில மாதங்கள் ஆகும் என்பதாலும், சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்வதற்கு வாரந்தோறும், கும்பகோணத்திற்குத் தொடர்ச்சியாக சென்றுவர நேரிடும் என்பதாலும், சிகிச்சை முடியும் வரை புதுச்சேரியில் தங்கியிருந்துள்ளார் அறிவழகன்.
அறிவழகனின் கையில் பணம் இல்லாததால், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்கு தினசரி 10 ரூபாய் கட்டண செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில், தனது மனைவியை மட்டும் தங்க வைத்துவிட்டு, அறிவழகனும் அவரது மகனும் மருத்துவமனை வளாகத்தில் படுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் தனது மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும், எஞ்சிய நாட்களில் கட்டடத் தொழிலுக்கும் சென்றபடி இருந்தார். இப்படியே மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தனது மனைவியின் முதல் கட்ட சிகிச்சை முடிந்து. பின்னர், அவரை 3 வாரத்திற்குப் பிறகு பரிசோதனைக்காக அழைத்து வர மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் மகனுடன் கும்பகோணம் திரும்பினார்.
மருத்துவர்கள் கொடுத்த 3 வாரம் முடிவடையும் நேரத்தில், அவரது மனைவிக்குச் சிகிச்சை செய்த இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பேருந்து சேவைகள் இல்லாத சூழலில், தனது மனைவியைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எப்படி அழைத்து செல்வதென்று தெரியாமல் இருந்தார்.
பிறகு, அவர் செல்வதற்கு வேறு வழி இல்லாத நிலையில், உடனே அதிகாலை 4.30 மணியளவில் தனது சைக்கிள் மூலமாக புதுச்சேரி அழைத்துச் சென்றுவிடலாம் என தனது மனைவியைச் சைக்கிளின் பின்புறம் ஏற்றிக்கொண்டு, சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்குச் சைக்கிளில் பயணத்தை தொடங்கினார் அவர்.
தொடர்ந்து 11 மணி நேரம் பயணம் செய்ததில் மதியம் சுமார் 2.30 மணியளவில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சென்ற போது மனைவி மஞ்சுளாவிற்குச் சற்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, வழியில் சாப்பிடுவதற்காக அவர் கட்டி வைத்த பழைய சோற்றினை ஊட்டி, சாப்பிட வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தனது மனைவி கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக, அவர் உடுத்தியிருந்த வேஷ்டியைக் கொண்டு, சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த மனைவியைத் தனது இடுப்போடு சேர்த்து சுற்றிக் கொண்டு சைக்கிளை ஓட்ட தொடங்கினார்.
பின்னர், அன்றிரவு 10.45 மணியளவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து, வந்து சேர்த்தார். அவரது மனைவிக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவரை மறுதினம் காலையில்தான் பார்க்க முடியும் என்று ஜிப்மர் பாதுகாப்புப் பணியாளர் கூறவே, அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டனர் அறிவழகனும் அவரது மனைவியும்.
பின், காலையில் மருத்துவர்கள் மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இது குறித்து அறிவழகனிடம் கேட்டபோது, “மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள், விட்டால் இறந்து விடுவாளோ என்று பயந்துவிட்டேன். அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் என்னால்? கொரோனாவால் புதுச்சேரி செல்ல பேருந்தும் இல்லை.
“சிகிச்சைக்குப் பிறகு எங்களைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்ப மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர். எனது மனைவிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை என் கையில் கொடுத்து எங்களை வழி அனுப்பினர், மேலும் எங்களைப் பத்திரமாக அழைத்துச் செல்லும்படியும் ஓட்டுநரிடம் தெரிவித்தனர்” என்கிறார் அறிவழகன்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது, “அவர் எப்படி இந்த வயதிலும், இவ்வளவு தூரம் அதுவும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து தடைகளையும் மீறி வந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர், அன்று நாங்கள் இவரது மனைவிக்கு தான் முதல் சிகிச்சை அளித்தோம். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தில் தெரியப்படுத்தினோம், ஜிப்மர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வசதி சேவையானது குறிப்பிட்ட தூரம் வரை இலவசமாக அளிக்கப்படும். ஆனால், இவர் 130 கிமீ செல்ல வேண்டும் என்பதால் ஜிப்மர் நிர்வாகத்தின் உதவியுடன் இலவசமாக ஆம்புலன்சில் வீடு வரை செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன” என்கிறார் அவர்.