ilakkiyainfo

கொரோனா அழிக்கும் புதிய கிருமிநாசினி : அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

கொரோனா வைரசை அடியோடு அழிக்கும் கிருமி நாசினி ஒன்றை, சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது, உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரசை எப்படி ஒழிப்பது என தெரியாமல், உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்த வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, வேகமாக பரவுகிறது.

இதைத் தடுக்க, கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர், இதை பயன்படுத்தினால், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்; ஆனால், வைரசை அழிக்க முடியாது.

உறுதி

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை முழுமையாக அழிக்கும், ‘ஏ.யு.சானிடைசர்’ என்ற கிருமிநாசினி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.பல்கலைக்கழகத்தின், என்.எச்.எச்.ஐ.டி., எனப்படும் சுகாதார கருவிகள் மேம்பாட்டுக்கான தேசிய மையம், இந்த கிருமி நாசினியை உருவாக்கி உள்ளது.

இது பற்றி, என்.எச்.எச்.ஐ.டி.,யைச் சேர்ந்த பேராசிரியர், சங்கர் கூறியதாவது: நாங்கள் உருவாக்கிஉள்ள கிருமி நாசினி, கொரோனா வைரசை அழிப்பதை, அதன் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்திஉள்ளோம். ஏனெனில், கொரோனா வைரசும், நாங்கள் தயாரித்துள்ள கிருமி நாசினியும், ஒரே அமிலத்தை கொண்டு உள்ளன. இது, வைரசை அடியோடு அழிக்கிறது.

கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரிடம், வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. அவர்கள், இந்த கிருமி நாசினியை பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதோடு, அடியோடு அழித்து விடும். இந்த கிருமிநாசினியை, கைகள், உடல் பகுதிகள், முக கவசங்கள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் என, எதிலும் பயன்படுத்தலாம்.

தயார்

இப்போது, பயன்பாட்டில் உள்ள கிருமிநாசினிகளுடன், இந்த ஏ.யு.கிருமி நாசினியை சிறிதளவு கலந்தால் போதுமானது. இதனால், கிருமி நாசினிகள் விலை, 10 ரூபாய் அதிகரிக்கலாம். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் உடலில், இந்த கிருமி நாசினியை தெளித்தாலும், அல்லது மூக்கில் சில சொட்டுகள் விட்டாலும், வைரஸ், மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டு விடும்; வைரசும் இறந்துவிடும்.

இதை, 200க்கும் அதிகமானோரிடம் பயன்படுத்தியதில், நல்ல பலன் கிடைத்து உள்ளது.இந்த கிருமி நாசினிக்கு, காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட, அண்ணா பல்கலைக்கழகம் தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Exit mobile version