தற்போது பிரேஸில் மற்றும் ரஷ்யாவிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது வேகமாக அதிகரித்து வருவதன் காரணத்தினால் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 4.02 மில்லியனையும் கடந்துள்ளது.
பிரேஸிலில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 10,169பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 664பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்கா நாடான பிரேஸிலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த இரண்டாவது நாள் இதுவாகும்.
பிரேஸிலில், கொரோனா வைரஸ் தொற்று பரவிய ஆரம்பத்தில் தொற்றுவீதம் குறைவாகவே இருந்த போதிலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தற்போது தொற்று வீதம் இரண்டு மடங்கு அதிகரித்து வருகின்றது.
இதன்மூலம் பிரேஸிலில் கடந்த 24 மணித்தியால இறுதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 156,061பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 10,656பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 83,720பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 61,685பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,318பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அதன்படி 187 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 4,025,175 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 279,329 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேநேரம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,376,025 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள்:
- அமெரிக்கா: 1,309,541
- ஸ்பெய்ன்: 223,578
- இத்தாலி: 218,268
- பிரிட்டன்: 216,525
- ரஷ்யா: 198,676
- பிரான்ஸ்: 176,782
- ஜேர்மன்: 171,324
- பிரேஸில்: 156,061
- துருக்கி: 137,115
- ஈரான்: 106,220
- சீனா: 83,990
- கனடா: 68,918
- பேரு: 65,015
- இந்தியா: 62,939
- பெல்ஜியம்: 52,596
கொரோனாவினால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:
- அமெரிக்கா: 78,794
- பிரிட்டன்: 31,662
- இத்தாலி: 30,395
- ஸ்பெய்ன்: 26,478
- பிரான்ஸ்: 26,313
- பிரேஸில்: 10,656
- பெல்ஜியம்: 8,581
- ஜேர்மன்: 7,549
- ஈரான்: 6,589
- நெதர்லாந்து: 5,441
- கனடா: 4,823
- சீனா: 4,637
- துருக்கி: 3,739
- மெக்ஸிகோ: 3,353
- சுவீடன்: 3,220
- இந்தியா: 2,109
- சுவிட்சர்லாந்து: 1,830
- ரஷ்யா: 1,827
- பேரு: 1,814
- எக்குவாடோர்: 1,717
- அயர்லாந்து: 1,446
- போர்த்துக்கல்: 1,126
தென் கொரியா
தென் கொரியா சனிக்கிழமையன்று 34 புதிய கொரோனா தொற்றாளர்கள் தனது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது ஏப்ரல் 09 ஆம் திகதிக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகளவான புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும் என்று தென்கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் இதுவரை மொத்தமாக 10,874 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 256 உயிரிழப்பு சம்பங்களும் பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 9,610 ஆக காணப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவில் நேற்று சனிக்கிழமை மாத்திரம் மொத்தமாக 25,621 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,309,541 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,794 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம் 212,534 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
வுஹான்
கொரோனா பரவலின் மையப்புள்ளியாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை புதிய கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு சாதகமான சோதனையை செய்துள்ளார்.