ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் ‘ஒற்றை சில்லை பயன்படுத்தி’ மோட்டார் சைக்கிள் ஓட்டப்பட்டுள்ளதால் கடவையை உடைத்துக்கொண்டு அது உள்ளேபாய, சம்பவ இடத்திலேயே அதனை ஓட்டிய நபர் உயிரிழந்துள்ளார்.

டன்பார் பகுதியைச் சேர்ந்த திருமணமான 30 வயதுடைய புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version