Site icon ilakkiyainfo

அண்மைக்காலமாக வடக்கில் உயிர் குடிக்கும் விபத்துக்கள்

வடக்கில் அண்மைக்காலமாக வாகன விபத்துக்கள் பெருகி வருகின்றன. இதனால் அப்பாவி இளைஞர்கள் பலர் அடுத்தடுத்து பலியாகியுள்ளமை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அநேகமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களேஅதிகரித்துள்ளன. அதேபோன்று  டிப்பர் வாகனங்களால்  ஏற்படும்  மரணங்களும் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதை காணமுடிகின்றது  .

மேலும் பூநகரி பாலத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பன அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருகின்றன. அதிகரித்த காற்றின்  அழுத்தம் மற்றும் வாகன சாரதிகளின் அதிவேகம், கவனயீனம் என்பன  இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

அந்தவகையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் இறுதியாண்டு மாணவனான மோகன் ஆகாஷ் என்பவர் பூநகரி பாலத்தினூடாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கையில் விபத்தில் சிக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான ஆகாஷ் சிறந்த மேசைப்பந்தாட்ட வீரராவார். தேசிய ரீதியில் மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்றி அதிகூடிய விருதுகளை பெற்றவராவார்.

இந்நிலையில் நண்பர்களுடன் பூநகரி நோக்கி பயணிக்கையிலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கவனமாக பயணிப்பது மிகவும் இன்றியமையாததாகும்  . இளம் வயதினர் இவ்வாறு விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பெற்றோர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லும் தரமன்று.

படித்து மிகுந்த போட்டிக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி பட்டம் பெற்று வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்களில் இவ்வாறு விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுமானால் அதனை எந்த பெற்றோராலும் ஜீரணிக்க முடியாது  என்பதே யதார்த்தம்.

இதேபோன்றே வடக்கில் அநேகமான விபத்துகளுக்கு டிப்பர் வாகனங்களும் காரணமாக அமைகின்றன. அவற்றின் அதி வேகம் , வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்காமை திடீர் திடீரென வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்படுவது என்பன இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

எனவே வடக்கில் யமனாக விளங்கும் டிப்பர் வாகனங்களினால் அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிஸார் தீவிர கவனம் செலுத்துவது இன்றியமையாதது. A-9 வீதியை பொறுத்தமட்டில் போக்குவரத்துப் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக விபத்துக்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன.

இவற்றுக்கு மத்தியில் பெற்றோரும் தங்கள் இளம்பிள்ளைகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ள மோட்டார் சைக்கிள்களை இளம் வயதினர்களுக்கு வாங்கிக்கொடுப்பதை பெற்றோர் கூடுதலான அளவு தவிர்ப்பது அவசியமாகும்.

மேலும் கடந்த காலங்களில் யுத்தத்தால் மரணித்தவர்களைவிடவும் வடக்கில் விபத்துக்களால் மரணித்தோரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகி வருகின்றது. எனவே இளம் வயதினரும் தாங்களாக தமது பொறுப்பை உணர்ந்து அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை எதிர்நோக்காதவண்ணம் நடந்துகொள்வது அவசியம் என்பதை மிகுந்த பொறுப்புணர்வுடன் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

Exit mobile version