மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சத்துருக்கொண்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகயமடைந்தவர், சிகிச்சை பயனின்றி நேற்று (05) மரணமடைந்துள்ளாரென, மட்டக்களப்புத் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

காரும் மோட்டர் சைக்கிளும் மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற தன்னாமுனை விபுலானந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், தன்னாமுனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த காரும், மட்டக்களப்பில் இருந்து தன்னாமுனை நோக்கிச் சென்ற மோட்டர்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரின் சகோதரர், இதே இடத்தில் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளாரென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நேற்று மரணித்தவரின் 38ஆவது பிறந்த தினமும் நேற்றாகும்.

விபத்துக்குக் காரணமாக இருந்த கார் சாரதி கைதுசெய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் நேற்று ஆஜரர்படுத்தப்பட்டபோது, அவரை, இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

சடலம், உடற்கூறாய்வுப் பரிசொதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு போக்குவரத்தப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version