கியூபா ஏவுகணை நெருக்கடி: ஆணு ஆயுதங்களோடு மூன்றாம் உலகப் போருக்கு மிக நெருக்கத்தில் சென்ற அமெரிக்கா சோவியத் ரஷ்யா
,
கியூபா நாட்டுக் கொடி
1962 அக்டோபரில் நிலவிய கியூப ஏவுகணை நெருக்கடி, ஒரேயொரு மோசமான கணிப்பு, ஒரு தகவல் தொடர்பு முறிவு அல்லது ஒரு சம்பவம் கட்டுப்பாட்டை மீறி நடந்திருந்தால் கூட பனிப்போர் உண்மையான போராக மாறி இருக்கும். அந்த போர் ஒரு அணுஆயுத போராக உருவெடுத்து இருக்கலாம்.
அப்படி நடந்திருந்தால் அது 20 ஆம் நூற்றாண்டில் முழு உலகத்தின் தலைவிதியை மாற்றும் ஒரு நிகழ்வாக உருவெடுத்து இருக்கும்.
துருக்கியில் சோவியத் யூனியனுக்கு அருகிலேயே ஜுபிட்டர் ஏவுகணைகளை நிறுத்தி இருந்த அமெரிக்காவுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் நட்பு நாடான கியூபாவில் சோவியத் ரகசியமாக அணு ஆயுத ஏவுகணைகளை களமிறக்கியது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில், நடுத்தரத் தொலைவு ஏவுகணை ஏவுதளங்கள் கட்டுமானத்தில் இருப்பதை அமெரிக்கா கண்டறிந்த உடன் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் நிர்வாகக் குழுவான மூத்த ஆலோசகர்களின் சிறப்பு குழுவை கூட்டி, நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். அக்டோபர் 22 அன்று, அதிபர் கென்னடி கியூபாவின் மீது கடற்படை முற்றுகையை அறிவித்தார்.
சோவியத்தில் இருந்து எந்த வித ஆயுதங்களும் கியூபாவுக்கு கொண்டு வரப்படக் கூடாது மீறி கொண்டு வரப்பட்டால், அதை அமெரிக்க கடற்படை பறிமுதல் செய்யும் வகையில் கியூபாவைச் சுற்றி கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இதை ஆங்கிலத்தில் நேவல் ப்ளாகேட் என்று அழைக்கிறார்கள்.
சோவியத் தலைமை, கியூபாவுக்குச் செல்லும் தங்கள் கப்பல்களை, அம்ரிக்காவின் தனிமைப்படுத்தலைத் தாண்டி பயணிக்க உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் போர் வெடித்து அணுசக்தி மோதல்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு சாதகமான சூழல் இருக்காது என்பதை அறிந்திருந்தது.
“1960 களின் தொடக்கத்தில் அணு ஆயுதங்களின் அடிப்படையில் அமெரிக்கா முன்னிலை வகித்தது. 1970 களில் தான் சோவியத் பனிப்போரில் சமநிலையை அடைந்தார்கள்” என்கிறார் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரும் ‘தி கியூபன் மிசைல் க்ரைசஸ்’ என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான மார்க் ஒயிட் கூறுகிறார்.
பின்னணி என்ன?
14 அக்டோபர் 1962 அன்று, அணுசக்தி ஏவுகணைகள் ரகசியமாக கியூபாவிற்கு அனுப்பப்பட்டது என்பதையும், சோவியத் நடுத்தர தொலைவு ஏவுகணை ஏவுதளங்களை உருவாக்குகிறது என்பதையும் நிரூபிக்கும் வகையில் ஒரு அமெரிக்க உளவு விமானம் புகைப்படம் எடுத்தது.
அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அணுசக்தி நாடாக இருந்த அமெரிக்காவால், கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் நிறுத்தப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனவே அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி மற்றும் அவரது ஆலோசனைக் குழு, பல பதில் நடிவடிக்கைகளை ஆலோசித்தனர்.
ஜான் எஃப் கென்னடி
ஜான் எஃப் கென்னடி, முன்னாள் அமெரிக்க அதிபர்
1962 அக்டோபர் 22ஆம் தேதி அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், அதிபர் கென்னடி கியூபா மற்றும் சோவியத்துக்கு எதிரான கடற்படை முற்றுகை மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுப்பதை அறிவித்தார்.
பல நாட்கள் நீடித்த பதற்றமான நிலைக்குப் பிறகு, இறுதியில் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றன. 13 நாட்கள் நீடித்த கியூப ஏவுகணை நெருக்கடி, ஏவுகணைகள் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது.
பதிலுக்கு, துருக்கியில் இருந்து தங்கள் சொந்த ஏவுகணைகளை அகற்ற அமெரிக்கா இரகசியமாக ஒப்புக்கொண்டது. இது பனிப்போரின் மிக ஆபத்தான அத்தியாயம், நல்லவேளையாக உலகம் அணு ஆயுத போரில் இருந்து பின்வாங்கியது.
ஆனால் பல விஷயங்கள் கியூப ஏவுகணை நெருக்கடி நிலையை அதிகரிக்க வழிவகுத்திருக்கலாம்.
அக்டோபர் 14 அன்று ஏவுகணை ஏவுதளங்களின் புகைப்படங்களை எடுத்த U-2 உளவு விமானத்தின் தகவல்கள் தாமதமாக கிடைத்திருக்கலாம், அதாவது தகவல் தாமதமாகக் கிடைத்து,
அதிபர் கென்னடி விரைந்து செயல்பட்டிருக்கலாம். அல்லது, நிகிடா குருசேவ் தடைகளைத் தாண்டி சோவியத் கப்பல்களை இயக்கி பதிலடி கொடுத்திருக்கலாம்.
ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா – 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
அக்டோபர் 27 அன்று, இரண்டு அமெரிக்க டெஸ்ட்ராயர் ரக கப்பல்களான யுஎஸ்எஸ் பீல் மற்றும் யுஎஸ்எஸ் கோனி, சோவியத் நீர் மூழ்கிக் கப்பலை இடைமறித்தது.
ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட கேப்டன், அவரது நிலை கொண்ட எதிரணி தலைவரான வாசிலி ஆர்கிபோவின் பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால், காற்றில் ஓர் அணு ஆயுதம் பறந்திருக்கலாம்.
தகவல் தொடர்புகளில் முறிவு, ராஜரீக ரீதியிலான முயற்சிகளில் தோல்வி… என எது வேண்டுமானாலும் கியூப ஏவுகணை நெருக்கடி நிலைமையை அதிகரிக்கும் சாத்தியம் கொண்டதாக இருந்தது.
கியூபா மீது பறந்த U-2 உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அமெரிக்க பைலட் மேஜர் ருடால்ப் ஆண்டர்சன் கொல்லப்பட்ட போது கூட அமெரிக்க அதிபர் கென்னடி பொறுமையாக சூழலை கையாண்டார் என்கிறார் மார்க் ஒயிட்.
இரு வல்லரசு நாட்டின் தலைவர்களும் எச்சரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தனர்.
அக்டோபர் 26 அன்று, அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமிக்காது என உறுதியளித்தால் ஏவுகணைகள் திரும்பப் பெறப்படும் என சோவியத் கூறியது, அதைத் தொடர்ந்து துருக்கியில் இருந்து அமெரிக்க ஏவுகணைகளை அகற்றக் கோரும் மற்றொரு ஒப்பந்தம் இரகசியமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
“ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த பிறகு கியூபாவை தாக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது” என ஒயிட் கூறுகிறார். “அந்த திட்டங்களை அவ்வப்போது புதுப்பிக்குமாறு அதிபர் கென்னடி தொடர்ந்து தனது ராணுவத்துக்கு அறிவுறுத்தி வந்தார்.”
வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, வடக்கில் 10 முதல் 15 நாட்களில் திட்டமிட்ட 2,61,000 துருப்புக்களை கியூபாவில் தரையிறக்கி, காஸ்ட்ரோவை வெளியேற்றி நாட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவது திட்டமாக இருந்தது.
“கியூபாவில் நிகழும் எந்தவொரு படையெடுப்பும் சோவியத் துருப்புக்களுடன் போரிட வேண்டி வந்திருக்கும்” என ஒயிட் கூறுகிறார்.
கியூபாவில் அமெரிக்காவுக்குத் தெரிந்ததை விட அதிகமான சோவியத் ஆட்களும், அணு ஆயுதங்களும் இருந்தன.
இதை எல்லாம் விட முக்கியமாக ஏவுகணைகளை செலுத்துவதற்கான அதிகாரம், கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. எனவே படையெடுப்பை தடுத்து நிறுத்த சிறிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அணு ஆயுத பரிமாற்றத்தைத் தொடங்க அதுவே போதுமானதாக இருந்திருக்கும்.
கியூபாவின் மீதமுள்ள ஆயுதங்களை அமெரிக்கா அழித்திருக்கலாம். அமெரிக்காவின் சில நகரங்களும் பதில் தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கலாம் என்கிற அபாயமும் இருந்தது.
சோவியத் ஒரே நேரத்தில் மற்ற இலக்குகளின் மீதும் தங்கள் கண்களை வைத்திருந்தது. “குருசேவ் வேறு இடத்தில் பதிலடி கொடுத்திருக்கலாம், உதாரணமாக பெர்லின்,” என ஒயிட் கூறுகிறார்.
வழக்கமான படைகளோடு அங்கு தாக்குதல் நடந்திருந்தால், ஐரோப்பாவை ஒரு மோதலுக்குள் இழுத்திருக்கும். விளைவு… மூன்றாம் உலகப் போர் மற்றும் உலகளாவிய அணு ஆயுத தாக்குதலுக்கு வழி வகுத்திருக்கலாம்.
அப்படி அணு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால், சோவியத் யூனியன் மீது ஏவுகணை மழை பொழிந்திருக்கலாம். அப்போரில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம், இருப்பினும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் நிச்சயமாக அழிக்கப்பட்டு இருக்கும்.
பல மில்லியன் மக்கள் அழிந்திருப்பார்கள். இன்று நமக்குத் தெரிந்த உலகம் ஒருபோதும் இருந்திருக்காது. இவை அனைத்தும் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது கண் சிமிட்டும் நேரத்தில் அதிபர் கென்னடியிடம் இருந்தோ அல்லது க்ருஷ்சேவ்விடமிருந்தோ வந்திருக்கலாம்.